நிவர் புயல்.. சென்னையிலிருந்து 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளும் நிறுத்தம்!
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் நிவர் புயல் உருவாகியுள்ளது. இது நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு , சென்னை ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதெல்லாம் நடக்க விட மாட்டார்கள்.. வல்லுநர்களை கொண்டு வந்த இ.பி.எஸ்.. நிவருக்கு தயாராகும் தமிழகம்!
அரசு பேருந்து சேவை
அத்துடன் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்பும், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை இன்று மதியம் 1 மணி முதல் நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இயக்கப்படாது
அத்துடன் மறு அறிவிப்புக்கு பின்னர் இந்த வழித்தடங்களுக்கான பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என்றும் இவை அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. இந்த நிலையில் அரசு உத்தரவுபடி ஆம்னி பேருந்துகள் மேற்கண்ட 7 மாவட்டங்களுக்கு இயக்கப்படாது என அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகள்
சென்னையிலிருந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்பும், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் மறுஉத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது. புயல் சின்ன அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் தாங்களாகவே இந்த மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டார்கள்.
முழு பணம்
இன்னும் சிலர் ரத்து செய்யாமல் உள்ளனர். அவர்களும் ரத்து செய்தவுடன் அனைவருக்கும் முழு பணம் திருப்பி அளிக்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை ரத்து செய்து விட வேண்டும்.