மறையாத சோகம்... 14-வது சுனாமி நினைவு தினம் இன்று...உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி
Recommended Video
சென்னை: 14-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர்.
14 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிய பக்கம் எல்லாம் மரண ஓலம், கண்ணில் தென்படும் இடம் எல்லாம் பிணங்கள். கடந்த 2004ம் ஆண்டு கடல் தாய் கொந்தளித்து கோரத்தாண்டவம் ஆடிய ஆட்டம் நாள் இன்று.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது. இது வலுவடைந்து இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர் அஞ்சலி
சுனாமியில் கன்னியாகுமரி, நாகை, கடலூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாகை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கடலூரில் சுமார் 600 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று கறுப்பு தினமாக அனுசரித்து மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மீன் சந்தைக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
நினைவு நாள்
ஆழிப்பேரலைக்கு உறவுகளை காவு கொடுத்த மக்கள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தும், சுனாமி தாக்கிய கடற்கரைகளில் மலர் தூவியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பால் ஊற்றியும் தங்களின் சோகத்தை நினைவு கூர்ந்தனர்.
மறையாத சோகம்
குமரி மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் 14-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியதில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வசித்து வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என 800க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். ஏராளமானோர் காணாமல்போயினர். உறவுகளை இழந்தவர்கள் இன்றும் மாறாத சோகத்தில் இருக்கின்றனர்.
கல்லறையில் மலரஞ்சலி
கடற்கரை கிராமங்களில் நினைவு திருப்பலிகள், மவுன ஊர்வலங்கள், மலரஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திலும் 119 பேர் பலியான மணக்குடி கல்லறை தோட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மௌன அஞ்சலி
வேளாங்கண்ணியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.