"ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே".. அப்போ இந்த ஆண்டும் பள்ளி திறப்பு அவ்வளவு தானா?
சென்னை : இதோ மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டன. பள்ளி சென்று வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வந்து 2 ஆண்டுகளாகி விட்டது. . இந்த ஆண்டும் அது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரள வைத்து, ஏராளமானோரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ துவங்கி ஓராண்டு கடந்து விட்டது. தடுப்பு கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இருந்தாலும் கொரோனா ஒழிந்தபாடில்லை.
ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கொரோனாவை முற்றிலுமாக வென்று விட்டோம் என இதுவரை எந்த நாடும் அறிவிக்கவில்லை. அந்த அளவிற்கு கொரோனா ஓயாமல் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் பொருளாதாரம், வணிகம், தொழில்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக உலக அரசுகள் புலம்பி வருகின்றன.
மறக்க முடியாத பாதிப்பு
ஆனால் கொரோனா ஏற்படுத்திய மற்றொரு முக்கிய பாதிப்பு இளைய தலைமுறையினரின் கல்வி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான, மறக்க முடியாத காலங்கள் என்றால் அது பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் என்பார்கள். அந்த அழகான அனுபவத்தை தற்போதைய தலைமுறையிடம் இருந்து கொரோனா தட்டி பறித்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஆல் பாஸ் அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 15 தேதி பள்ளிகள் மூடப்பட்டன. அந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய பள்ளி தேர்வுகள், கல்லூரி செமஸ்டர்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு கல்லூரி படிப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் பாஸ் என தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
ஆன்லைனில் பாடங்கள்
லாக்டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் பள்ளி நிர்வாகங்கள் வேறு வழியின்றி, கடந்த ஆண்டு ஜுன் - ஜுலை மாதங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கின. ஆரம்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் வேறு வழியின்றி பின்னர் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்தினர். பெற்றோர்களும் இப்படியாவது தங்கள் பிள்ளைகள் படிக்கிறார்களே என நிம்மதி அடைந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்
விரைவில் பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் மாணவர்களும், பெற்றோர்களும் இருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை கொரோனா இரண்டாம் அலை வாரி சுருட்டிக் கொண்டு போனது. இதனையும் மீறி கொரோனா குறைந்த நிலையில் 8 ம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் பல மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்தாண்டாவது பள்ளிகள் திறக்குமா
இதனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் கூட ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனிலேயே தேர்வுகளும் நடத்தப்பட்டன. ஆன்லைன் வகுப்புக்கள் பெற்றோர்களுக்கு கூடுதல் வேலை பளுவாக இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சகித்துக் கொண்டனர். இந்நிலையில் இந்தாண்டாவது பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை
இது பற்றி முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்குள் கொரோனா மூன்றாம் அலை 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் தாக்க துவங்கி விடும். இது குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டாம் அலையின் தாக்கத்தின் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், மூன்றாம் அலையும் வரும் என எச்சரிக்கப்பட்டதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்
இதற்கிடையில் பள்ளிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புக்களை துவங்கி உள்ளன. இதனால் இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அப்படியே பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சத்தை மீறி பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்பது சந்தேகம் தான்.