கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதமே சவால் விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதமே சவால் விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவில்லை.
இந்த மனு மீது நாளையும் விசாரணை நடக்காது. ஆக.23-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பெஞ்ச் விசாரிக்கிறது
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்று ப. சிதம்பரம் அரசால் மிக மோசமாக நெருக்குதலுக்கு உள்ளாகிறார். ஆனால் இதை கடந்த மார்ச் மாதமே பிரதமர் மோடி சவாலாக விடுத்து இருந்தார். ஆம் கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது அவர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
என்ன புத்திசாலி
மோடி தனது பேச்சில், புகழ்பெற்ற மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் நடுத்தர வர்க்கத்தினரை இழிவு படுத்தி பேசி வருகிறார். அவர் மக்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டார். அவருக்கு தான்தான் புத்திசாலி என்று நினைப்பு இருக்கிறது. மற்றவர்கள் செய்வதை விமர்சனம் செய்வதே அவரின் வேலை.
என்ன கட்சி
தனது கட்சி தலைமையை போலவே அவரின் குடும்பமும் ஊழல் குடும்பம். தற்போது குடும்பத்துடன் அந்த முன்னாள் அமைச்சர் ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் ஏறி இறங்கி கஷ்டப்படுகிறார். ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.
இல்லை
ஒருபோதும் நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன். நாட்டில் ஊழல் செய்தவா்கள் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். அந்த முன்னாள் அமைச்சரும் பதில் சொல்வார் என்று சவால்விட்டு இருந்தார். தற்போது அதே போல மத்திய அரசின் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்திற்கு செக் வைத்து இருக்கிறது. மோடி சொன்னது போலவே அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.