இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்.. இனி அலைச்சல் இல்லை.. என்னென்ன நன்மை!
சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த திட்டத்தால் என்னென்ன நன்மை, ஏன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்.
பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மக்கள் அங்குள்ள ரேஷன் கடைகளில் எதையும் வாங்க முடியாத நிலை இருந்தது. அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள் ரேஷன் கார்டை ஊர் விட்டு ஊர் மாற்றவோ அல்லது மாநிலம் விட்டு மாநிலம் மாற்றவோ, பல நாட்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது.
குறிப்பாக வெளிமாநிலத்திற்கு செல்லும் ஏழை மக்களால் அலைந்து வாங்க முடியாத நிலை இருந்தது. இதனால் அவர்களுக்கு அரசின் எந்த நலதிட்ட உதவிகளும் கிடைப்பது இல்லை. இதையடுத்து மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தை ஏற்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியது. இதை தமிழகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி தான் அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
மதுரை, நெல்லை, ராமேஸ்வரம், செங்கோட்டைக்கு சென்னையில் இருந்து நாளை முதல் தினசரி ரயில்கள்.. விவரம்
யார் வாங்க முடியும்
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதற்கட்டமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்படுகிறது. இந்த நடைமுறையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும். அதே நேரத்தில் அந்த ஸ்மார்ட் கார்டை மற்றவர்கள் கொண்டு வந்தால் பொருட்களை பெற முடியாது. இந்த பயோ மெட்ரிக் கருவிகள் மாநிலம் முழுவதும் 35,233 ரேஷன் கடைகளிலும் வைக்கும் பணி நடந்து வருகிறது.
அமலுக்கு வந்த மாவட்டங்கள்
இதனிடையே இன்று முதல் விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் திட்டம்32 மாவட்டங்களில் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகை, தென்காசி, தேனி, நீலகிரி, கரூர், திருப்பூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோவை, சிவகங்கை, கடலூர், திண்டுக்கல் ஆகிய 32 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.
அக்.16 முதல் அங்கு நடைமுறை
அதேநேரம் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அக்.16ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இந்த திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
பொருட்களை வாங்குவது ஈஸி
இந்த திட்டத்தால் என்ன நன்மை: தமிழகத்தில் உங்களுக்கு எந்த ஊரில் ரேஷன் கார்டு இருந்தலும், நீங்கள் எந்த ஊரிலும் வசித்தாலும், உங்கள் ரேஷன் கார்டுடன் சென்று விரல் ரேகை வைத்து பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் .
புலம் பெயர்ந்தவர்கள்
ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு செல்பவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு பயோ மெட்ரிக் முறை பின்பற்றப்படும். அதாவது அவர்களின் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படம்.
குடும்ப உறுப்பினர்கள்
கடைகளில் ரேஷன் பொருட்கள் இல்லை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு இந்த திட்டத்திற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. கடை ஒன்றிற்கு 5 சதவீதம் பொருட்கள் கூடுதலாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ரேகை முறையால் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் உங்கள் ரேஷன் கார்டில் இனி பொருட்கள் வாங்க முடியாது.