பெரிய சிக்கல் வரும்.. ஒரே நாடு ஒரே ரேஷனை அனுமதிக்க கூடாது.. ஸ்டாலின் பகீர் எச்சரிக்கை!
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையை மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது. நாடு முழுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் நபர்களும் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்க முடியும். இந்த திட்டத்தை மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்று பெயர் வைத்து அழைத்து வருகிறது..
ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை தொடர்பாக நேற்று மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இதில் தமிழக அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது. தமிழகத்தில் பொது விநியோக முறை மிக சிறப்பாக இருக்கிறது. இதில் இணைந்தால் அந்த முறையே பாதிக்கப்படும்.
பிற மாநில மக்கள் நலன்பெற்று, தமிழக மக்கள் பாதிக்கப்பட்டும் நிலை இதனால் உருவாகும். இந்த திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசின் மோசமான திட்டங்களுக்கு துணை போகிறது. இந்த திட்டம் தொடர்பாக 1.99 கோடி கார்டு உரிமையாளர்களிடமும், சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாக கருத்து கேட்க வேண்டும்.
ஆனால் அப்படி எந்த விதமான கருத்தும் கேட்காமல் அரசு முடிவெடுக்கிறது. இது மக்களுக்கும், மாநில உரிமைக்கு எதிரானது. பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது மற்றும் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு எடுத்துள்ளது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.