"சுதந்திர இந்தியாவில் முதல் முறை.." மூன்றில் ஒரு சிறு, குறு நிறுவனம் மூடப்பட வாய்ப்பு- ஷாக் சர்வே
சென்னை: ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில்கள் துவங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் கூட, சிறு குறு தொழில் நிறுவனங்களில் மூன்றில் ஒன்று மூடப்பட கூடிய சூழ்நிலையில், இந்தியா இருப்பதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் (AIMO) மேலும் 9 தொழில்துறை அமைப்புகளுடன் சேர்ந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மொத்தம் 46 ஆயிரத்து 525 தொழில் முனைவோரிடம் எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்களை சேர்ந்த 35% பேர் மற்றும் சுயதொழில் செய்வோரில் 37% பேர் தங்கள் தொழிலை இனிமேல் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
32 சதவீதம், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நிலைமை மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெறும் 12% பேர் மட்டுமே மூன்று மாதங்களுக்குள் நிலைமை சரியாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்?
பாதிப்புகள்
உற்பத்தி அளவு குறைவாக இருப்பது, எதிர்காலத்தில் ஆர்டர்கள் வருமா என்பது கேள்வி குறியாக இருப்பது போன்றவை இந்த பிரச்சினைகளில் முக்கியமானவையாகும். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமே தொழில்கள் தொடங்குவதற்கு காரணமில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பாதிப்பு இருந்தது
"ஏற்கனவே போதிய அளவுக்கு பணப்புழக்கம் இல்லாமல் வணிகர்கள் அவஸ்தைப்பட்டு வந்ததாகவும், பணமதிப்பிழப்பு மற்றும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவை கடந்த மூன்று வருடங்களாக தொழில் நசிவு அடைவதற்கான காரணம். இந்த பிரச்சனைகளுடன் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இணைந்து கொண்டுள்ளது" என்கிறார் அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரகுநாதன்.
சுதந்திரம் பெற்ற பிறகு
சுதந்திரம் பெற்ற பிறகு இப்படியான ஒரு மிகப்பெரிய தொழில் நசிவு நிலைமை வந்தது கிடையாது என்றும் அவர் தெரிவிக்கிறார். உலகத்திலேயே மிகவும் கடுமையான லாக்டவுன் நடைமுறை என்பது இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்றாவது கட்ட ஊரடங்கு காலகட்டத்தின்போதுதான் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது மே 17ஆம் தேதிக்கு பிறகு.
பாதிப்பு இல்லை
இந்தியாவில் முக்கியமான தொழில் துறை மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவைதான். ஆனால், இந்த மாநிலங்களில் அதிகப்படியான கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுவும் தொழில்துறை முடக்கத்திற்கு ஒரு காரணம். இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றதில் மூன்று சதவீத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், 6 சதவீத கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் 11% சுய தொழில் செய்வோர் தாங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும், தொடர்ச்சியாக சிறப்பாக செயலாற்றுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய கூடிய பிரிவில் வருபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.