மனித குலத்திற்கு பேரிழப்பு... உலகளவில் கொரோனாவால் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் ஒரு லட்சத்து 90 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத்தொடங்கிய சீனாவை விட ஐரோப்பிய நாடுகளில் இந்நோயால் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகள் முழுவதையும் ஆட்கொண்டு ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சீனாவில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது போன்று தெரிந்தாலும், இத்தாலியில் அதை விட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக மக்களை குலை நடுங்கச் செய்தன. அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் 1152 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 953 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் இன்று ஒரே நாளில் 496 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை இத்தாலியில் 18, 279 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் ஜெர்மனியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால் கடந்த 10 நாட்களில் தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்னர் இருந்த நிலையை விட இந்த 10 நாட்களில் மட்டும் 6% கூடுதலான உயிரிழப்புகள் உலகளவில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மட்டும் 77 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 911... பலி 9... நலம்பெற்றவர்கள் 44
இதனிடையே சற்றே ஆறுதல் அடையக் கூடிய விவகாரம் என்னவென்றால் உலகளவில் 3,69,017 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தொடக்கத்திலேயே அறிகுறி கண்டறிந்து முறையான சிகிச்சை, நோயிலிருந்து மீள்வோம் என்ற நேர்மறை எண்ணங்கள், காரணமாக இவர்கள் நலம் பெற்றதாக கூறப்படுகிறது.