நூலகத்துறையில் கரன்ஸி மழை... பணம் கொடுத்தால் பணி நிரந்தரம்... பகீர் தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் ஊரக நூலகங்களில் தற்காலிக நூலகர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஒரு ஆளுக்கு தலா ரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை விலை நிரணயிக்கப்பட்டுள்ளதாகவும், நூலகத்துறையில் பணியாற்றும் சில அலுவலர்களே இந்த காரியத்தில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
நூலகத்துறை பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கவனத்தில் கொண்டாரா என்பது கேள்விகுறியாக உள்ளது.
நூலகர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் நூலகர்கள் பணியிடம் பெரும்பாலும் காலியாகவே உள்ளது. இதனால் புத்தகங்கள் பராமரிப்பு, புதிய புத்தகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரக நூலகங்கள், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், 250-க்கும் மேற்பட்ட வட்டார நூலகங்கள், மற்றும் மாவட்ட பொதுமைய நூலகங்கள் என இயங்கி வருகின்றன. இந்நிலையில் நூலகத்துறையில் நடக்கும் முறைகேடுகளை பற்றி நம்மிடம் பல பகீர் தகவல்களை கூறினார் சென்னையில் உள்ள பிரபல நூலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்.
கூட்டுறவு சொசைட்டி
கிராமப்புற நூலகங்களில் தற்காலிக நூலகர்களாக பணியாற்றுபவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாதம்தோறும் தற்போது ரூ.7000 ஊதியமாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கான பணி நேரம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிய ஊழியர்களிடம் பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறும் ஒரு கும்பல், ரூ.75,000 முதல் ரூ.1,25000 வரை பணம் வசூலித்து வருகிறது. நூலகத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளே இந்த செயலில் ஈடுபடுவதாக கூறுகிறார் அந்த அதிகாரி. மேலும், பணம் இல்லாதவர்களை வலுக்கட்டாயமாக கூட்டுறவு சொசைட்டியில் இணைத்து அதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுக்கொடுத்து அந்த பணம் அபகரிக்கப்படுகிறது என தெரிவிக்கிறார்.
ஆசை
கிராமப்புற நூலகங்களில் பணியாற்றும் நூலகர்கள் நமக்கு ஒரு நிரந்தரமான வேலை கிடைத்தால் சரி என நினைத்து பணத்தை கொடுத்து பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் வேலை கிடைத்தபாடில்லையாம். ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலரும் அமைச்சரை தெரியும், அவரை தெரியும், இவரை தெரியும் என அளந்துவிட்டு பணம் வசூலிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர் நூலகத்துறை சார்ந்த சங்கத்தினர். பதிவு மூப்பு சீனியாரிட்டி அடிப்படையில் நூலகர் பணியிடங்களை நிரப்ப அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேக்கம்
இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு நியாயமான முறையிலும், நூலகவியல் படிப்பு படித்துவிட்டு பணிக்காக காத்திருப்போரை நியமிக்க வேண்டும் எனவும் பெயர் வெளியிட விரும்பாத நூலகர்கள் நல சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகிறார். கிராமப்புற நூலகர் பணியிடங்களுக்கே ஒரு லட்சத்திற்கு குறையாமல் பணம் வசூலிக்கப்படும் நிலையில், வட்டார நூலகர் பணியிடங்களுக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என அவர் தெரிவிக்கிறார்.
ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு அரசுக்கு பெரிய சிக்கலை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் நூலகத்துறையிலும் புதிய புகார் எழுந்துள்ளது. இதை அமைச்சர் செங்கோட்டையன் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.