ஒரு மாஸ்க் ரூ.6.45க்கு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் இலவசமாக கொடுக்கிறோம் - ஆர்.பி உதயகுமார்
தமிழகத்தில் ரேசன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்பட உள்ள மாஸ்க் ஒன்று ரூ. 6.45க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இலவச மாஸ்க் வழங்கப்பட உள்ளது. இந்த மாஸ்க்குகள் எத்தனை ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது எத்தனை கோடி மாஸ்க்குகள் விநியோகம் செய்யப்பட உள்ளன என்று கூறியுள்ளார் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இலவசமாக வழங்கப்பட உள்ள மாஸ்க் ஒன்று ரூ.6.45க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மாநிலம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது..
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கான திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நபர் ஒருவருக்கு 2 மாஸ்க் வீதம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். பி. உதயகுமார்,ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட உள்ள மாஸ்க் ரூ. 6.45க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறினார்.
ரேசன் கடைகளில் இலவச மாஸ்க் ஆகஸ்ட் 5 முதல் ஆளுக்கு 2 கொடுப்பாங்க
ஒரு நபருக்கு இரண்டு மாஸ்க் வீதம் 4.44 கோடி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் உதயகுமார், தமிழ்நாட்டில் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.30 கோடியில் இலவச மாஸ்க் வழங்கப்பட இருக்கிறது.