பொள்ளாச்சி கொடூரம்.. புகார் கொடுக்க மேலும் ஒரு பெண் முன்னுக்கு வந்தார்.. பரபரப்பு பேட்டி
சென்னை: பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் துணிச்சலாக போலீசில் புகார் அளிக்க முன்வந்துள்ளார். ஆனால் காவல்துறை அவரிடம் புகார் வாங்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கூட்டு, பாலியல் பலாத்காரம் செய்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல், அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த இளம் பெண் துணிச்சலாக தனது குடும்பத்திடம் இது குறித்து தெரிவித்ததால், அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் இணைந்து காமுகர்கள் குறித்து போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டு போராட்ட களம்போல மாறிய பொள்ளாச்சி.. விரட்டியடித்த போலீஸ்.. அசையாத மாணவ, மாணவிகள்
புதிய பெண்
இந்த சம்பவம், ஊடகங்கள் வழியாக வெளி உலகத்திற்கு வந்த பிறகு, காவல்துறை வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்து, அதன் காரணமாக இப்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு பெண்ணும் துணிச்சலாக இந்த கும்பலுக்கு எதிராக புகார் கொடுக்க முன்வந்துள்ளார். இன்று காலை பொள்ளாச்சி நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து அவர் புகார் அளிக்க காத்திருந்தார். ஆனால் மாலை வரை அவரிடம் போலீசார் புகாரை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மூன்று வருட காதல்
இதையடுத்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், கூறியுள்ளதை நீங்களே பாருங்கள்: மூணு வருடமாக நாங்கள் இருவரும் காதலித்தோம். என்னிடம் ஆசை வார்த்தை காட்டி கூட்டிச் சென்று பலவந்தப்படுத்தி தப்பான புகைப்படங்களை எடுத்து வைத்து என்னை மிரட்டி, என்னிடமிருந்து, நிறைய காசு, பணம் வாங்க ஆரம்பித்து விட்டார்.
போட்டோக்கள்
பைக், போன் மற்றும் வீட்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தருமாறு என்னை மிரட்டினார். அப்படி, தராவிட்டால் இந்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன், எனது தந்தைக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டினார். பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றிலும் இதை வெளியிட்டு, உனது மானத்தை வாங்கி விடுவேன் என்றும் மிரட்டினார்.
பல பெண்கள்
இந்த நிலையில்தான், எனக்கு முன்பாக, அவரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள், நாங்கள் இருவரும் காதலிப்பதை அறிந்து என்னை அழைத்து அவர்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் குறித்து என்னிடம் பேச ஆரம்பித்தனர். எனவே, போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அவர்களை அழைத்தேன். ஆனால், நாங்கள் புகார் அளிக்க வந்தால் எங்கள் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும். எனவே நாங்கள் புகார் அளிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறி விட்டனர். ஆனால், இதற்கு மேலும் என்னை மாதிரி பெண்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதாக என்பதற்காக துணிச்சலுடன் நான் புகார் அளிக்க முன் வந்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
காலை முதல் காத்திருப்பு
நான் காவல்துறையினரிடம் புகார் அளிக்கச் சென்ற போது, சிறிது நேரம் காத்திருங்கள் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை என்னிடம் போலீசார் எதுவும் பேசவில்லை. நான் விசாரித்துப் பார்த்த அளவில் அவர் வேலை பார்த்த பஸ் கம்பெனியில், உட்பட கிட்டத்தட்ட 100 பெண்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது மட்டுமின்றி அரிசி கடத்தல், கஞ்சா கடத்தல் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளார். இதை அவர் வாயாலே என்னிடம் சொல்லி உள்ளார். அவரிடம் சரியாக விசாரித்தால் அவரது பின்னணி குறித்து நிறைய தகவல் வெளி வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்தப் பெண் தெரிவித்தார். அதேநேரம், அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி வளைத்தது எந்த இளைஞர் என்ற பெயர் விவரம், அந்த பேட்டியில் வெளியிடப்படவில்லை.