இவரு மா.செ.வா? செயல் தலைவரா? ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்'
சென்னை: இதெல்லாம் தலைமை சொல்லி நடக்குதா? இல்ல இவரு தானாகவே உத்தரவு போடுகிறாரா? இப்படி... பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி ஆன்மீக நகரத்து உடன்பிறப்புகள் விசனப்படுகின்றனர்.
எதிர்க்கட்சியில் ஆண்டுதோறும் நடக்கும் சம்பிராதய விழாவை நானே நடத்துகிறேன் என கிச்சன்கேபினட்டிடம் இருக்கும் செல்வாக்கு மூலம் பெற்றார் ஆன்மீக நகரத்து குறுநில மன்னர். கிச்சன்கேபினட்டின் 'ஆக'ப்பெரும் நிழல் என்பதால் எளிதாக இதை அவரால் சாதிக்க முடிந்தது.
அப்படி ஒப்புதல் வாங்கி விழாவுக்கான பணிகளையும் அவர் சரியாகத்தான் செய்து வந்தார். ஆனால் திடீரென விளம்பர விவகாரங்களில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்தான் திமுகவினரை ரொம்பவே அதிர்ந்து போக வைத்ததாம்.
தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்
முதலீடு விவகாரத்தில் முக்காடு
கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்தான் இந்த குறுநில மன்னர். கிச்சன்கேபினட் கொடுத்த முதலீடு விவகாரத்தில் முட்டல் மோதல் ஏற்பட்டு கொஞ்ச காலம் தலையே காட்டாமல் முக்காடுடன் பதுங்கி இருந்தவர்தான்.
கட்சி நிர்வாகிகளை விரட்டியவர்
லோக்சபா தேர்தலின் போது தமது கட்டுப்பாட்டு தொகுதியில் 2 சட்டசபை தொகுதிகள் பக்கத்து மாவட்டத்தில் வந்தன. அதனால் அந்த மாவட்ட கட்சியினர் விருப்ப மனு கொடுத்தனர். அவர்களை மனு கொடுக்க வைக்க அனுமதிப்பது போல் ஓகே சொல்லிவிட்டு மனு தாக்கலின் போது அவமானப்படுத்தி, ஓட ஓட விரட்டியடித்ததும் இதேகுறுநிலத்தாரின் கோஷ்டிகள்தான்.
திருமண நிகழ்ச்சியில் பேச்சு
அண்மையில் தலைமைக்கு உதவியானவர் வீட்டு திருமணம் நடைபெற்றது. அதில் இவர் பேசிய பேச்சுதான் அந்த கட்சியின் ஹாட் டாபிக்காகவே மாறிப்போனது. வீட்டம்மா சொல்றதை கேட்டு நடந்தா பிரகாசமான எதிர்காலம் இருக்கு என ரொம்ப யதார்த்தமாகத்தான் தலைவரை சுட்டிக்காட்டி பேசினார் இந்த பிரமுகர். ஆனால் குசும்புக்கார உடன்பிறப்புகள், இவரு சொன்ன வாசகம் சரி.. ஆனால் ஊருக்கு ஊரு வீடு வைத்திருப்பவர் சொல்வதுதான் வேடிக்கை என மண்டபத்திலேயே நக்கலடித்துவிட்டனர் என்பது தனி கதை.
ஷாக்கிங் உத்தரவு
இப்போது சம்பிரதாய விழாவுக்கு வருவோம்... இந்த விழாவுக்காக எந்த அணியாக இருந்தாலும் அத்தனை விளம்பரங்களிலும் சின்னவர் படம்தான் ரொம்ப பெரிதாக இருக்கனும்... பெரியவர் படம் அடுத்த சைஸ்.. அந்த 3 பேர் படம் ஸ்டாம்ப் சைஸ் ஒன்லி.... மற்ற யாரு.. யாராக இருந்தாலும் அவங்க படத்தைப் போடவே கூடாது என உத்தரவு பிறப்பித்துவிட்டாராம்.
நிழல் செயல் தலைவரா?
தங்களது அணி செயலாளர் படத்தை கூட தப்பி தவறி போட்டுவிட்டால் விளைவுகளை சந்திப்பீங்க என்றும் எச்சரித்திருக்கிறார் அவர். ஒரு மாவட்டத்துக்கு பொறுப்பானவர்... இப்படி மாநில அளவிலான விவகாரங்களில் எப்படி மூக்கை நுழைக்கிறார்? இதெல்லாம் தலைமை சொல்லி நடக்கிறதா? நிஜத்திலேயே இவரை நிழல் செயல் தலைவராக்கிட்டாங்களா? என கடுப்பை கொட்டுகின்றனர் திருத்தலத்து உடன்பிறப்புகள்.