ஒரே நாடு; ஒரே தேர்தல் - குறுக்கு வழியில் அதிபர் ஆட்சிக்கு முயற்சியா?
சென்னை: பாஜக முன்வைத்துள்ள 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் நாடு முழுவதும் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி, 'ஒரே நாசம்; ஒரே மோசம்' என்று கூறி கடுமையாகத் தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது.
எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? ஈரோடு கிழக்கில் பாஜக ஆதரவு எந்த அணிக்கு.. அவங்களுக்குத்தான் அதிக சான்சாமே?
கடுமையாக எதிர்க்கும் ‘முரசொலி’
பாஜக எல்லா விஷயங்களிலும் இந்த 'ஒரே' என்ற கான்செப்ட்டை கலந்துவிடுவது வழக்கம்தான். உதாரணமாக, ஒரே மதம், ஒரே தேசம், ஒரே உணவு, ஒரே கலாச்சாரம் என்பது தொடங்கி இன்று ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்பது வரை வந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் எல்லா நோய்க்கும் பாஜக வைத்திருப்பது ஒரே மருந்துதான். எதற்கெடுத்தாலும் 'தேசப் பற்றை' கூறி நியாயப்படுத்துவதே அக்கட்சியின் நோக்கமாக உள்ளது. சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பாஜக ஆட்சியைப் பிடித்தது.
அப்போது அந்த மாநில அரசை ஒரே தேர்தல் காரணத்தைக் காட்டி கலைக்கப்போகிறார்களா? நடந்து முடிந்துள்ள மாநிலத் தேர்தல் மூலம் பல கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அதனைக் கலைப்பதன் மூலம் எவ்வளவு பணம் வீணாக்கப்படும் என்பதை பாஜக அறிந்துள்ளதா?
ஆட்சி கலைந்தால் ஆளுநர் ஆட்சியா?
பாஜகவுக்குத் தெரிந்த ஒரே பாதை, கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிப்பது. ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை தங்களின் பக்கம் இழுத்து ஆட்சியை அமைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள கட்சி அது.
இப்போது உள்ள மாநில ஆட்சிகளைக் கலைத்துவிட்டால், எப்போது தேர்தல் நடத்தப்படும்? வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போதா? அப்படி என்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் மாநில ஆட்சியை யார் நடத்துவார்கள்? ஆளுநர்களா? இதற்கான தேவையற்ற தேர்தல் செலவை பாஜகவே தங்களின் கட்சி நிதியிலிருந்து வழங்குமா? எனப் பல கேள்விகளை முன்வைத்துள்ளது திமுகவின் 'முரசொலி' தலையங்கம்.
சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலையே இரண்டு கட்டமாகவே நடத்தி முடித்தார்கள். அதையே ஒரே கட்டமாக நடத்த முடியாத போது, இந்தியா முழுக்க ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமா?
அப்படி எனில் உள்ளாட்சித் தேர்தல் தனியாக நடத்தப்படுகிறதே, அதையும் ஒரே தேர்தல் என்ற கருத்துக்குள் கொண்டுவரப்போகிறார்களா? என்று பாஜகவின் யோசனையை 'முரசொலி' மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதற்கிடையே வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழும் வாக்காளர்கள் வசிக்கும் பகுதியிலிருந்தே ஓட்டுப்போடும் வசதியை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது. அதற்காக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துக் கேட்டுள்ளனர். அதில் திமுக சார்பில் பங்கேற்ற வில்சன் கூட்டம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ரிமோட் ஓட்டு மிஷின் ஆபத்தா?
வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் கூறுகையில், "ரிமோட் ஓட்டிங் மிஷின் என்பதை அறிமுகம் செய்வதற்காக ஒரு கருத்து கூட்டத்தைக் கூட்டி இருந்தனர். அதாவது தொலைதூர மின்னணு எந்திரத்தைக் கொண்டு வருவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த எந்திரத்தின் மூலம் வேறு மாநிலத்தில் வசிக்கும் ஒருவர் தங்களின் சொந்த தொகுதியில் நடைபெறும் தேர்தலுக்கு வாக்களிக்க முடியும் என்கிறார்கள். அது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. அது குறித்து பல்வேறு ஐயங்கள் உள்ளன. இந்த எந்திரத்தைக் கொண்டுவர வேண்டாம் என்பதை திமுக தரப்பிலிருந்து எங்களின் எதிர்ப்பை நான் பதிவு செய்தேன்.
முதலில் வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் யார்? அவர்கள் பற்றிய தரவுகள் எங்கே? என்பதை எல்லாம் முதலில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஒருவர் எந்த மாநிலத்திலிருந்தே தனது மாநிலத் தேர்தலுக்கு வாக்களிக்கும் போது, அந்த நபர் சரியான நபர் தானா என்பதை யார் உறுதி செய்வார்கள்? வேறு மாநில அதிகாரி இவரை எப்படி எளிதாய் அடையாளம் காண்பது? அது சாத்தியமா? எனப் பல கேள்விகளைக் கேட்டோம். ஆனால் எதற்கு முறையான பதில் அவர்களிடம் இல்லை. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை அனைத்து கட்சிகளும் மிகக் கடுமையாக எதிர்த்தன. எங்கள் கேள்விக்குப் பதில் இல்லாததால் இந்தியத் தேர்தல் ஆணையர் இன்று செயல்முறை விளக்கத்தை நடத்திக் காட்டவில்லை. மீண்டும் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கமளிக்கும் போது செய்முறை விளக்கம் நடத்தப்படும் என்று கூறிவிட்டார்" என்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய திட்டத்தை பாஜகவும் ஒடிசா மாநில ஆளும் கட்சியும் மட்டுமே ஆதரித்துள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய செய்தி. 'ஒரே நாடு , ஒரே தேர்தல்' முறையை எதிர்த்து சட்ட ஆணையத்துக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வேகமாகப் பறந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்:
அதில் இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றது. மேலும் சிக்கலானது. அரசியல் சானத்திற்கு முற்றிலும் எதிரானது என்று விளக்கம் அளித்துள்ளார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ள மாநிலக் கட்சிகளைக் கலைப்பது சட்டத்திற்கு விரோதமானது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற யோசனையை 3 ஆண்டுகளுக்கு முன்பே தொல். திருமாவளவன் மிகக் கடுமையாக எதிர்த்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் குடியரசுத் தலைவரின் உரையின் போது இக்கருத்தை முன்வைக்கப்பட்டபோது, அதனை மிக ஆபத்தான ஒரு முயற்சி என்றும் திருமாவளவன் சாடி இருந்தார். அதேபோல் குடியரசுத் தலைவர் உரையினை அன்றே திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக எதிர்த்திருந்தார். அது ஏற்புடையது அல்ல என்றும் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
மூன்று முறை ஆட்சிக் கலைந்ததே? என்ன செய்ய?
மேலும் அவர் இப்போது பேசும் போது, "1996இல் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. 1998இல் அந்த ஆட்சிக் கலைந்து இன்னொரு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. மீண்டும் 1999இல் மூன்றாவதாக ஒரு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இந்த வரலாறுகள் எல்லாம் நமக்குத் தெரியும். அப்படி என்றால் ஒவ்வொருமுறையும் நாடாளுமன்றத்திற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் கூடவே சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்த முடியுமா?" என்று ஒரு சந்தேகத்தை முன்வைக்கிறார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "சட்டமன்றத்தின் ஆயுளை எப்படி வேண்டுமானாலும் ஒன்றிய அரசு நினைத்தால் குறைக்கலாம். 5 ஆண்டுகள் என்பது எந்த ஆட்சிக்கும் உத்தரவாதம் இல்லாததாக ஆகிவிடும். இது இந்திய ஜனநாயகத்திற்கே உலை வைக்கும் முயற்சி" என்கிறார்.
அதிபர் ஆட்சிக்கு அடிபோடும் பாஜக:
"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது. நடைமுறைக்கு உதவாதது" என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தரசன். இவரது கருத்தையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனும் பிரதிபலிக்கிறார். அவர், "அனைத்துக் கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணி ஆட்சியைக் கொண்டுவந்தால், அதைக் கலைக்கவும் இந்தப் புதிய முறை மறைமுகமாக உதவும்" என்கிறார்.
"வரும் 2024 தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என நம்புகிறது. ஆகவே ஒட்டுமொத்தமாக இந்திய ஜனநாயகத்தையே சீர்குலைக்க முயற்சி செய்கிறது. அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. ஆகவே இந்தத் திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது" என்கிறார் விசிகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.