பாரதிக்கு கல்யாணமாகி 24 நாட்களே ஆகிறதாம்.. வட பழனியை உலுக்கிய திடீர் விபத்தின் சோகம்
சென்னை: சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் நடந்த விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவரான பாரதிக்கு திருமணமாகி 24 நாட்கள் ஆகிற நிலையில் இத்தகைய சோக சம்பவத்தால் அவரது குடும்பமே நிலைக்குலைந்துள்ளது.
வடபழனியில் ஆற்காடு சாலையில் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு நேற்று இரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் டிரைவர்கள், கன்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலமுருகன் தனது பேருந்தை பழுது பார்க்கும் இடத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது திடீரென பாலமுருகனின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த ஓய்வறையில் மோதி நின்றது.
எலும்பு முறிவு
இதில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் 7 பேர் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மீட்கும் பணிகளை தொடர்ந்தனர். அப்போது பாரதி, சேகர் ஆகியோர் தங்களது கழுத்து எலும்பு முறிந்து இறந்து கிடந்தனர்.
செஞ்சி
விபத்தில் பலியான பாரதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர். இவர் இளநிலை டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 24 நாட்களே ஆகிறது. இதுகுறித்து செஞ்சியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதுநிலை டெக்னீசியன்
புதுமாப்பிள்ளை பாரதியின் உடலை கண்டு அவரது மனைவி கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது போல் உயிரிழந்த சேகர் சாலிகிராமத்தை சேர்ந்தவர். இவர் முதுநிலை டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.
பணியாளர்கள்
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் ரொக்கமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடபழனி பணிமனையில் நடந்த இந்த திடீர் விபத்தால் ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர்.