நேருக்கு நேர் மோதும் தமிழிசை - வைகோ.. திருச்சியில் களமிறங்க முடிவு?.. சூடுபிடிக்கும் தேர்தல்
லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பது பெரிய கேள்விகுறியாகி உள்ளது. ஆனாலும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இந்த கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை போட்டி
இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது. ஆனால் அதிமுக இந்த தொகுதியை பாஜகவிற்கு கொடுக்க சம்மதிக்கவில்லை.
என்ன பிரச்சனை
சென்னை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பாக எம்.பி ஜெயக்குமார் ஜெயவர்த்தன்தான் போட்டியிடுவார் என்று உறுதியாகி இருக்கிறது. அதிமுக மாநில அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகன்தான் எம்.பி ஜெயக்குமார் ஜெயவர்த்தன். இந்த தொகுதியை அதிமுக யாருக்கும் கொடுக்க விரும்பாததால் கூட்டணியில் இழுபறி நீடித்தது.
திருச்சி
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி தொகுதியில் இருந்து போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார் என்கிறார்கள். தற்போது திருச்சி தொகுதி எம்பியாக பி.குமார் இருக்கிறார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அங்கு அவர் வெற்றிபெற்றுள்ளார். இங்குதான் தற்போது தமிழிசை போட்டியிட முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.
என்ன டிவிஸ்ட்
இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இதே திருச்சி தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்று கூறுகிறார்கள். திமுக மதிமுகவிற்கு திருச்சி தொகுதியை ஒதுக்க உள்ளது. இங்குதான் வைகோ போட்டியிடுவார் என்று உறுதியாக கூறுகிறார்கள்.
எதிர் எதிர்
இதனால் தற்போது தமிழிசையும் - வைகோவும் நேருக்கு நேர் தேர்தலில் சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் நல கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அதற்கு அடுத்த லோக்சபா தேர்தலிலேயே இரண்டு பேரும் எதிரெதிராக போட்டியிடுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.