ஒரு பக்கம் சட்டப்போராட்டம்.... ஒரு பக்கம் தேர்தல் பணி... திமுக முடிவு
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்து கொண்டே தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறது திமுக.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இட ஒதுக்கீடு சட்டவிதிமுறைப்படி பின்பற்றப்படாததை எதிர்த்து ஒரு பக்கம் சட்டப் போராட்டம் தொடர்ந்தாலும், மற்றொரு பக்கம் எப்போதும் போல் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளது திமுக.
உள்ளாட்சி தேர்தல்- திமுக, காங்., மனுக்கள் மீது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
நேரெதிரே சந்திப்போம்
உள்ளாட்சித் தேர்தலை திமுக நேரெதிரே சந்தித்து புதிய வரலாறு படைக்கும் என நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், நீதிமன்றத்தை நாடும் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் தீர்மானம் வடிக்கப்பட்டுள்ளது.
தீர்மான வேறுபாடுகள்
திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தேர்தலையும் சந்திப்போம், நீதிமன்றத்தையும் நாடுவோம் என்கிற பொருள்படும் வகையில் வரிகள் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் சட்டப்போராட்டமும் தொடரும், தேர்தல் பணியும் நடைபெறும் என சூசகமாக கூறியுள்ளது திமுக.
மூத்த நிர்வாகிகள்
மேலும், மூத்த மாவட்டச் செயலாளர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, நீலகிரி முபாரக் போன்றோரும் தேர்தல் பணிகளையும் தொடங்கலாம், வழக்கும் நடத்தலாம் என ஏற்கனவே கூறினார்களாம். இதனிடையே திமுக ஆதரவு நிலைப்பாட்டில் மக்கள் இருப்பதாகவும், தேர்தல் ரத்தாவதற்கு திமுக தான் காரணம் என அதிமுக பிரச்சாரம் செய்தால் நமக்குத் தான் மைனஸ் ஆகும் என்றும் மேலும் சில நிர்வாகிகள் துரைமுருகனிடம் தெரிவித்திருக்கிறார்கள். அவரும் அதை ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்.
தயாராக இருங்க
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம் என்றும், தேர்தல் நடைபெற்றாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி எப்போதும் போல் கிளைக்கழக மற்றும் ஊராட்சி, ஒன்றிய, நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை அளித்துள்ளார்.