மூன்றே வருஷம்.. முக்கால்வாசி மக்கள் நல கூட்டணி திமுகவுடன் ஐக்கியம்! மாற்று அரசியல் கோஷம் மாயம்
Recommended Video
சென்னை: அதிகமில்லை.. மூன்று வருடங்களுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி உடைந்து சின்னாபின்னமாகச் சிதறிப்போயுள்ளது. எந்த கட்சிகளை எதிர்த்து கூட்டணி தொடங்கப்பட்டதோ, இப்போது அதே கட்சிகளுடன், அவை கை கோர்த்துள்ளன.
மக்கள் நல கூட்டணியில் இருந்த முக்கால்வாசி கட்சிகள், இப்போது திமுகவின் பின்னால் அணிவகுத்து உள்ளன.
வழக்கமாக அதிமுக மற்றும் திமுக ஆகிய அணிகளுக்கு நடுவே சட்டசபை தேர்தல் களைகட்டும் சூழல் 2016 சட்டசபை தேர்தலில் மாறி இருந்தது.
திமுகவின் தலைவராக அப்போது பதவி வகித்த கருணாநிதி, உடல் நலம் நலிவுற்றிருந்த சூழ்நிலையில், அதை பயன்படுத்திக்கொண்டு அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணி உருவானது. அந்த அணியை பெயர் மக்கள் நல கூட்டணி. இதை உருவாக்குவதில் மிகவும் முன்னணியில் இருந்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இறுதி வடிவம் பெற்றது திமுக மெகா கூட்டணி.. மொத்தம் 9 கட்சிகள்.. எந்த கட்சிக்கு எத்தனை சீட்?
முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்
இந்த கூட்டணியில் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை இருந்தன. எல்லாம் நன்றாய் போய்க்கொண்டிருந்த நேரத்தில், கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். மூத்த தலைவர்கள் பலர் இந்த கூட்டணியில் இருந்த போதிலும், விஜயகாந்த்தை முதல்வராக அறிவித்ததன் மூலம், கூட்டணி குறித்த மக்களின் பார்வையில், முதல் சறுக்கல் ஏற்பட்டது.
மக்கள் நல கூட்டணி
இதன் பிறகு கட்சி ஆதரவு மீடியாக்களால், விஜயகாந்தின் பிரச்சாரம் கடும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. கடைசி நேரத்தில் வைகோ திடீரென சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டது மற்றொரு பெரும் பின்னடைவாக மாறியது. இந்த கூட்டணி ஆவேசமாக பிரச்சாரங்களை செய்தது. ஆனால், எந்தத் தொகுதியிலும் இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை.
ஆர்கே நகர் தேர்தல்
இதையடுத்து ஒவ்வொரு கட்சியாக இந்த கூட்டணியில் இருந்து வெளியேறத் தொடங்கின. இறுதியில் ஆர்கே நகர் இடைத் தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பியது. ஆனால் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் விரும்பியது. இதனால் மக்கள் நல கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. தேர்தல் களத்தில் தனித்தனியே செயல்படுவது என அந்த மூன்று கட்சிகளும் முடிவு செய்தன. இதன் மூலம், முடிவுக்கு வந்தது மக்கள் நல கூட்டணி.
மாற்று அரசியல்
இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டும் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. இருப்பினும், திமுகவில் கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதால் அந்த கட்சிகள் அங்கு செல்லும் வாய்ப்பு இல்லை. எஞ்சியிருப்பது தனித்துப்போட்டி, அல்லது அதிமுகவுடன் கூட்டணி என்பது மட்டுமே. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி கட்சிகள், இப்போது அந்த இரு கட்சிகளையுமே, தஞ்சமடைந்துள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் மாற்று அரசியல் என்ற கோஷம் மங்கிப் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.
டெய்லி வாக்கிங் போவாங்களா
மக்கள் நலக் கூட்டணி உருவானபோது செல்பி எடுத்துக் கொண்டும், டி சர்ட்டில் வாக்கிங், ஜாகிங் என்றும் கலக்கியவர்கள் இப்போது திமுக அணிக்கு வந்திருப்பதால் இவர்களுடன் ஸ்டாலினும், வாக்கிங் போய் செல்பி எடுத்துக் கொள்வாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.