ஒரே ஒரு டிவீட்.. ஒரே ஒரு வரி.. டோட்டல் காங்கிரஸும் டரியலாகிப் போச்சு.. குஷ்பு கடுப்பு!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை ஏற்பட்டு இருப்பது நடிகை குஷ்பு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததுதான். இது தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இதுவரை வேறு எந்தக் கட்சிகளும் இவரது கருத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ பதில் அளிக்கவில்லை.
தேசிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் குஷ்பு பதிவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, கரூர் எம்.பி. ஜோதி மணி இருவரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.
காங்கிரஸில் கலகக் குரல்-குஷ்பு மீது ஜோதிமணி கடும் பாய்ச்சல்- கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது!
ரோபோக்கள்
''ஜனநாயகம் என்பது அனைவரின் கருத்துக்களையும் கேட்டு மதிக்கப்படுவதாகும். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும், பாஜகவைப் போல் இல்லாமல், மக்கள் ரோபோக்களாக, கைப்பாவைகளாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காது'' என்று ஜோதி மணி பதிவிட்டு இருந்தார்.
பாஜகவில் இணைப்பா
தற்போது ட்விட்டரில் குஷ்புவின் பதிவு விவாதப் பொருளாகி இருக்கிறது. ''ஒரு லைன்...ஒரு ட்வீட்...இவ்வளவு பெரிய புயலா'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பலரும் பதில் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர், ''நீங்கள் பாஜகவில் இணையப் போகிறீர்களா''என்று வினவியுள்ளனர். ஒருவர், ''உங்களிடம் எவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்'' என்றும் , சிலர், ''நீங்கள் அதிமுகவில் இணையப் போகிறீர்களா'' என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ''இருக்குற கட்சிக்கு உண்மையா இருப்பது இல்லை..இதனால்தான் கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருப்பது'' என்று இருவர் பதிவிட்டுள்ளார்.
ஏபிஜே அப்துல் கலாம் உதாரணம்
இதற்கு பதில் அளித்து இருக்கும் குஷ்பு, ''நான் யாருக்கும் தலை ஆட்டும் ரோபோவாக, கைப்பாவையாக இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும், சாதக, பாதக கருத்துக்கள் இருப்பது சகஜம்தான். அதுபோல்தான் புதிய கல்விக் கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், நான் வரவேற்கிறேன். ஒவ்வொருவரும் பள்ளிக்கு செல்வதற்கான வழியை ஏன் நாம் கண்டறியக் கூடாது. ஏன் கல்வி கொடுக்கக் கூடாது என்பதற்கான காரணம் இருக்கிறதா? ஏபிஜே அப்துல் கலாம் தான் நமக்கு உதாரணம். ஒவ்வொருவரும் பள்ளிக்குச் செல்வதை முதலில் உறுதி செய்வோம். கல்வி முக்கியம். மொழி இரண்டாவது'' என்று தெரிவித்துள்ளார்.
திணிப்பு வேண்டாம்
இங்கு நாம் கவனிக்கத்தக்க ஒன்று இருக்கிறது. திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மும்மொழி வழிக் கல்வியை கடுமையாக எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கக் கூடாது என்று திமுக காலம் காலமாக குரல் கொடுத்து வருகிறது. பள்ளிக்கு செல்வதை இந்தக் கட்சிகள் அனைத்துமே ஊக்குவிக்கின்றன. ஆதரிக்கின்றன. சொல்லப் போனால், குலக் கல்வியை பள்ளிக் கல்வியாக மாற்றியதே காங்கிரஸ் ஆட்சியில்தான். காமராஜர் முதல்வராக இருந்தபோது, குலக் கல்வியை மாற்றினார்.
தமிழக கட்சிகள் எதிர்ப்பு
அப்படி இருக்கும்போது, இந்தக் கட்சிகள் எதிர்ப்பது மொழி திணிப்பு கல்வியைத்தான். குஷ்பு இங்கே குறிப்பிடுவது. பள்ளிக்கு ஒவ்வொருவரும் வருவதை வரவேற்போம் என்று கூறுகிறார். இந்தக் கருத்துக்கு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், மொழியை திணிக்க வேண்டாம் என்பதுதான் தமிழக கட்சிகளின் முன்னெடுப்பாக இருக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்த பதிவை குஷ்பு இடுவதால்தான், விவாதத்துக்கு உள்ளாகிறது.
பிரதமரும் அங்கீகரிப்பு
இந்தியை, சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக எடுத்து படிப்பதை தமிழகத்தில் இதுவரை எந்த ஆட்சியிலும் எதிர்க்கவில்லை. ஆனால், திணிப்பைத்தான் எதிர்க்கின்றனர். மொழி திணிப்பு தமிழ் மீதான மோகத்தை குறைத்து விடக்கூடாது என்பதுடன், தமிழ்தான் தொன்மை மொழி என்பது ஆணித்தரமாக உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடியும் பல மேடைகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழை உலக மேடைகளில் பெருமைபடுத்தியுள்ளார்.