ஓய்வு பெற்ற கலெக்டருக்கு 35 ஆயிரம் சம்பளம்.. காரைக்கால் பக்கம் நிலம் கையகப்படுத்த ஓஎன்ஜிசி தீவிரம்
சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் ஆகிய திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது ஓஎன்ஜிசி நிறுவனம்.
ஹைட்ரோ கார்பன் புதிய ஆய்வுக்காக தமிழக சுற்றுச்சூழல் குழுவிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்தது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்று சுற்றுச்சூழல் குழு மறுத்து விட்டது.
காவிரி மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய ரசாயன ஆலைகளை தடை செய்ய வைகோ வலியுறுத்தல்
வல்லுநர் குழு
அதேநேரம், இந்த மாவட்டத்திற்கு வெளியே எண்ணெய் உற்பத்தி எடுக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகளை கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார். மேலும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி கேட்ட அனுமதியை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.
காரைக்கால்
இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த ஓய்வு பெற்ற நில அளவையர், ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர் மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆகியோரை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளது ஓஎன்ஜிசி நிறுவனம்.
விளம்பரம்
இது தொடர்பாக தினசரி பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவலையும் தெரிவித்துள்ளனர். ஓய்லு பெற்ற துணை கலெக்டருக்கு 35 ஆயிரம் சம்பளம், ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 33 ஆயிரம் சம்பளம், ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 30 ஆயிரம் சம்பளம், ஓய்வுபெற்ற நில அளவையருக்கு 25000 சம்பளம், இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன்
எப்படியாவது இந்த மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த ஓஎன்ஜிசி மும்முரமாக இருப்பதை இந்த விளம்பரம் உறுதியாகத் தெரிவிக்கிறது.