Onion Price: பசுமை பண்ணை கடைகளில் நாளை முதல் ரூ.45க்கு வெங்காயம் கிடைக்கும் - அரசு அறிவிப்பு
வெங்காயம் விலை உச்சத்திற்கு சென்றுள்ளதால் இல்லத்தரசிகள் உரிக்காமலேயே கண்ணீர் விடுகின்றனர்.
சென்னை: வரத்து குறைவு காரணமாக சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இல்லத்தரசிகள் வெங்காயத்தை வாங்கவே யோசித்து வருவதால் சென்னையில் நாளை முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூபாய் 45 க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. கடந்த வாரங்களில் 3 கிலோ 100 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயம் 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானா, வட கர்நாடகா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வெங்கயம் 400 மூட்டைகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாயாக விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை முதலே பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 முதல் 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெங்காயத்தின் பெயரை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னைவாசிக்கு அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள பசுமை பண்ணைக் கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
கடந்த 2013 ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்தது. காய்கறிகளின் விலையும் அதிகரித்தது. மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பசுமை பண்ணை காய்கறி கடைகளை சென்னையில் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. வெங்காயம், காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.
இப்போது மீண்டும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால் ஏழை நடுத்தர மக்களுக்காக நாளை முதல் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Recommended Video
சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு வெங்காய விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாநிலம் முழுவதும் உள்ள ஏழை, நடுத்தர மக்களின் கோரிக்கையாகும்.