பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் வாங்க குவிந்த கூட்டம் - மணிக்கணக்கில் காத்திருப்பு
பசுமை பண்ணைக்கடைகளில் வெங்காயம் வாங்க மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
வெங்காயம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் சென்னை பசுமை பண்ணைக்காய்கறி கடைகளில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர். நபர் ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது. 80க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 20 முதல் 30 வரை அதிகரித்துள்ளது.
மக்களின் சிரமத்தை போக்க நேற்று முதல் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முதலே மக்கள் ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.
சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமை கடையில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் பெரிய வெங்காயமும், 10 லட்சம் டன் சின்ன வெங்காயமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தேவைப்பட்டால் ரேசன்கடைகளிலும் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விலை நிர்ணயம் நிதியத்தின் மூலம் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த நிதியின் மூலம் விலை உயரும் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படுவதால் வெங்காயத்தை பதுக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டு 150 டன்னுக்கு வெங்காயம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மீண்டும் அதிர்ச்சி தரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்.. புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதி
Recommended Video
இதனிடையே தற்போது எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வந்தடைந்தது. எகிப்து வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயரும் என்பதால் வியாபாரிகள் முன்னெச்சரிக்கையாக இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே 135 டன் வெங்காயத்தை எகிப்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர்.
தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த பருவ அறுவடை நடைபெறும் போதுதான் வெங்காயம் விலை குறையவாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுவரை எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.