சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180... வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்களேன்
சின்ன வெங்காயம் ஒரு கிலோ 180 ரூபாயாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் உரிக்காமலேயே கண்ணீர் விடுகின்றனர். வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று ரெசிபிக்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: காய்கறி சந்தைகளில் சின்ன வெங்காயம் வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை உரித்தால் மட்டும்தான் கண்ணீர் வரும் என்றில்லை அதை பார்த்தாலே கண்ணீர் வருகிறது. வெங்காயம் சேர்க்காமல் சாம்பார் வைப்பது எப்படி என்று யாராவது டிப்ஸ் சொன்னால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா காலத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டாலும் காய்கறி கடைகள் திறந்திருந்தன. கடைகளில் கூட்டம் அலைமோதியது. எல்லா காய்கறிகளும் விற்று தீர்த்தன. வெங்காயம், தக்காளி, காய்கறிகள் விலை குறைவாகவே இருந்தது. புரட்டாசி மாதத்தில் கூட காய்கறி விலை உயரவில்லை. வெங்காயம் விலையும் அதிகமாக உயராமல் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையானது.
வட மாநிலங்களில் பெய்த மழை, தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்த மழையால் தற்போது வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நான்கரை மாதத்திற்கு பின்.. திறக்கப்பட்ட கோயம்பேடு தானிய மார்க்கெட்! காய்கறி சேல்ஸ் எப்போது தெரியுமா?
வெங்காய விலை உயர்வு
காய்கறி கடைக்கு 200 ரூபாய் கொண்டு சென்றால் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பலத்த மழை காரணமாக வெங்காய வரத்து தமிழகத்தில் மிகவும் குறைந்து உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடக, மாநிலத்தில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300 லிருந்து 350 லாரிகள் மூலம் தினசரி காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வெங்காய விளைச்சல்
நாட்டின் மொத்த சின்ன வெங்காயம் உற்பத்தி மற்றும் நுகர்வில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, மதுரை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பாரம்பரியமாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தை, வைகாசி மற்றும் புரட்டாசி ஆகிய 3 பட்டங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் சேமித்து விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விற்பனை
அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள மைசூர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து இருக்கும்.
பொதுவாகவே சின்ன வெங்காயத்தின் சந்தை விலை கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை இருக்கும். வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி குறைந்தது. சின்ன வெங்காயம் விலை நிலையாக இருக்கும் என்று
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை
இந்நிலையில், வெங்காயத்தின் விலை கடந்த இரண்டு வாரமாக உச்சத்தில் இருந்து வருகிறது. அதன்படி, இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மழை காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை வெங்காயம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
ஆண்டுதோறும் இதே நிகழ்வு
வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கும். சென்னை கோயம்பேட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் திடீரென நவம்பர் மாத தொடக்கத்தில் 3 மடங்கு உயர்ந்து ரூ.80க்கு விற்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் அரசு கொள்முதல் செய்த வெங்காயத்தை வெளிச்சந்தையைவிட குறைவாக ஒரு கிலோ ரூ.30, ரூ.40 விலையில் 2 ரகங்களில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.
சாம்பார் வெங்காயம் விலை உயர்வு
வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை கோயம்பேட்டில் விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.160ல் இருந்து ரூ.180 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.180ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்தது.
ஜனவரி வரை விலை குறையாது
நடப்பாண்டு அக்டோபர் மாதத்திலேயே சின்ன வெங்காயம் ஒரு கிலோ 180 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி மாதம் வரை இருக்கலாம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இதே விலை உயர்வு நீடிக்கும் பட்சத்தில் சாம்பாரில் வெங்காயம் எங்கே என்று தேட வேண்டியிருக்கும். ஆனியன் ரைத்தா, வெங்காய போண்டா சாப்பிடுபவர்கள் எல்லாம் பெரிய பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள். வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.