ஆன்லைன் வகுப்பு.. சிக்னலுக்காக 3 கி.மீ நடந்து.. மலை உச்சியில் கொட்டகை அமைத்து படிக்கும் மாணவர்கள்
திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சை மலையில் ஆன்லைன் வகுப்பு படிப்பதற்கு சிக்னல் வேண்டும் என்பதற்காக 3 கிலோமீட்டர் நடந்து மலை உச்சியை அடைகிறார்கள். அங்கு கொட்டகை அமைத்து மாணவ மாணவியர்கள், அமர்ந்து படித்து வருகிறார்கள்.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சமவெளிப்பகுதியில் வசிக்கும் மக்களே ஆன்லைன் கல்வியை கற்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். செல்போன் இல்லாதது. இணையதள வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் அவதிப்படுகிறார்கள்.
இந்த சூழலில் மலைவாழ் மக்கள் ஆன்லைன் கல்விக்காக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மலை உச்சியில் கொட்டகை அமைத்து படிப்பது தெரியவந்துள்ளது.
100 மாணவ மாணவியர்
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்து மலைப்பகுதி பச்சை மலை. இங்குள்ள வண்ணாநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமம். இங்கு ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு 100-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளார்கள்.
பள்ளிகள் திறப்பில்லை
இவர்கள் அருகிலுள்ள துறையூர் மற்றும் திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். தற்போது கொரோனா காரணமாக பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது இதனால் இவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே இருக்கிறார்கள்.
சிக்னல் இல்லை
பச்சைமலையை சுற்றி உள்ள மலை கிராமங்களில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. கிணத்தூர் கிராமத்தில் இருந்து மணலோடை செல்லும் வழியில் சுமார் 3 கிலோ மீட்டர் சுமார் 100 அடி உயரமுள்ள மலைக்குன்றில் மட்டுமே தொலைதொடர்பு சேவை கிடைக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த குன்று பகுதியில் மரக்குச்சிகள் மற்றும் இலை, தழைகளை கொண்டு தாங்களே தற்காலிக கொட்டகை அமைத்து படித்து வருகிறார்கள்.
செல்போன் கோபுரங்கள்
இவர்கள் தங்கள் வகுப்பு நடைபெறும் நேரத்துக்கு ஏற்ப இங்கு வந்து பாடங்களை படிக்கிறார்கள் இதற்காக 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பாடம் படித்துவிட்டு, பின்னர் வீட்டுக்கு செல்கிறார்கள். இதனிடையே இந்த செல்போன் கோபுரம் சரியாக செயல்படுதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது இந்த பகுதி மாணவ- மாணவிகளின் நலன் கருதி, கூடுதலாக செல்போன் கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.