தமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு
சென்னை: தமிழக எம்.பி.க்களில் பாதி பேருக்கு மட்டுமே டெல்லியில் அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் பராமரிப்பின்றி இருக்கும் பழைய வீடுகளை அரசு ஒதுக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிந்து 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இப்போது தான் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது.
பழைய பராமரிப்பற்ற வீடுகளில் குடியேற விரும்பாத எம்.பி.க்கள், தங்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்க வேண்டும் அல்லது தற்போது ஒதுக்கீடு செய்துள்ள வீடுகளை சீரமைப்பு செய்தாவது தர வேண்டும் என கடிதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி!
வீடுகள் ஒதுக்கீடு
மக்களவைத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் தமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், 10 முதல் 15 எம்.பி.களுக்கு மட்டுமே வீடுகள் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பராமரிப்பு இல்லை
தமிழக எம்.பி.களுக்கு ஒதுக்கப்படக் கூடிய வீடுகளில் பெரும்பாலானவைகள் பழைய வீடுகளாகவும், பராமரிப்பின்றி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த வீடுகளில் குடியேறவும் முடியாமல், வீட்டை விட்டுவிடவும் முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் பல எம்.பி.க்கள்.
குடியேறுதல்
இது தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசிய போது அவர் கூறியதாவது, வீடுகளை இப்போது தான் அதிகாரிகள் ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்களுக்கு வீடுகள் தரப்பட்டுவிட்டன. தமிழகத்தில் இருந்து நான் உட்பட 2 பேருக்கும், கேரளாவில் ஒருவருக்கும் வீடுகள் டெல்லியில் கொடுக்கப்பட்டுவிட்டன.ஆனால் பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் உள்ளதால், அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரினோவேஷன் ஒர்க் முடிந்தவுடன் நான் அந்த வீட்டிற்கு குடியேறிவிடுவேன். அதுவரை தமிழ்நாடு இல்லத்தில் தான் தங்கவேண்டிய சூழல் உள்ளது.
முழுமையாக வழங்கவில்லை
மேலும், யார் யாருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் கூறிய சு.வெங்கடேசன் எம்.பி., தனக்கு அந்த விவரம் சரியாக தெரியவில்லை என்றும், ஆனால் பாதிபேருக்கு மட்டுமே வீடுகள் கிடைத்துள்ளது எனவும் கூறினார்.