வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு
சென்னை: சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் படத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
விடுதலைப் போராட்ட வீரரும் தமிழக உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சரும், நலிந்த பிரிவு மக்களுக்காக குரல் கொடுத்தவருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் 19-ம் தேதி மாலை 5-30 மணிக்கு சட்டசபையில் திறந்து வைக்கப்படும்.
என்னுடைய தலைமையில் ( சபாநாயகர் ) துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில், எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி, இன்று நடந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திரசேகரன் , அன்புமணி ராமதாஸ் , பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே .மூர்த்தி , முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்திற்கு கீழ் 'வீரம்... தீரம்... தியாகம்' என எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்ட நிலையில், 12 வது உருவப்படமாக ராமசாமி படையாச்சியாரின் படம் திறக்கப்பட்டுள்ளது.