ஜூன் 3-ல் பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு வழங்க 2.98 கோடி இலவச பாட புத்தகங்கள் தயார்
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாத துவக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 90 லட்சம் மாணவர்களுக்கு, 2 கோடியே 98 லட்சத்து 47 ஆயிரம் விலையில்லா பாட புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையானது, வரும் ஜூன் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூன் மாதம் 3-ல் மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக பாட புத்தகங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணிகளில், பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கல்வி அதிகாரிகள், புத்தகங்களை அனுப்பும் பணி வரும் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது.
ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும்போது, மாணவ, மாணவிகளுக்கான அனைத்து இலவச பாடப்புத்தகங்களையும் ஒரே நாளில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இது தவிர சுமார் 1 கோடியே 47 லட்சத்து 52 ஆயிரத்து 550 பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கடைகளிலும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.