அடடே போட வைக்கும் தமிழ்நாடு போலீஸ்! ’ஆபரேஷன் மறுவாழ்வு’ ஒரே நாளில் 726 பிச்சைக்காரர்கள் மீட்பு!
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள் மற்றும் 16 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், ஏழைப் பெண்களையும், குழந்தைகளையும் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள், ரவுடிகளின் அட்டூழியங்கள், கூலிப்படையினர் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதாக அடுத்தடுத்து புகார் கூறப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான போலீசார் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை பிடிக்கவும் கஞ்சா விற்பனை செய்போரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருவண்ணாமலை தீபம் காண வரும் 30 லட்சம் பக்தர்கள்..பார் கோடுடன் கூடிய பாஸ்..டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக காவல்துறை
அந்த வகையில் ரவுடிகளை பிடிக்கும் முயற்சியாக அக்டோபர் மாதத்தில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை, கஞ்சா விற்பனையை ஒழிக்கும் பொருட்டு ஆபரேஷன் கஞ்சா 2.0 உள்ளிட்ட ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன. தமிழக காவல்துறை சார்பில் நடத்தப்படும் இது போன்ற ஆப்ரேஷன்கள் பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு சார்ந்தவையாகவே இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்துறை இன்று முன்னெடுத்துள்ள 'ஆப்ரேஷன் மறுவாழ்வு' பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஆப்ரேஷன் மறுவாழ்வு
பேருந்து நிலையம் கோவில் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்கள் சிறுவர்கள் வயதானவர் பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது. ஒரு சிலர் உண்மையிலேயே வறுமை மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வந்தாலும் பலர் இதனை தொழிலாகவே செய்து வருவதாக கூறப்படுகிறது. உச்சகட்டமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வயதான முதியோர்கள் சிறுவர்களை கடத்தி வந்து குறிப்பிட்ட பகுதிகளில் ரவுடி கும்பல்கள் அவர்களை ஊனப்படுத்தியும் மிரட்டியும் பிச்சை எடுக்க வைப்பதாக பகீர் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஏழைப் பெண்களையும், குழந்தைகளையும் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிரடி நடவடிக்கை
இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"தமிழ்நாட்டில் உள்ள நகர்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச் சாலை சுங்கச் சாவடிகளிலும் பெண்களையும், சிறார்களையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் இந்தத் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு ஆபரேஷன் மறுவாழ்வு என்ற அதிரடி நடவடிக்கை இன்று தொடங்கப்பட்டது.
மறுவாழ்வு இல்லம்
தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும் 9 காவல் ஆணையரகங்களிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள் மற்றும் 16 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். பெண்களையும் குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது.மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கும் குழந்தைகள் காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டனர்,
குண்டர் சட்டம்
150 நபர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏழைப் பெண்களையும், குழந்தைகளையும் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகர்களுக்கு வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் குற்றவாளிகள் பற்றிய தகவல் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.