நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம்... பொ.ப.துறை மீது துரைமுருகன் பாய்ச்சல்
சென்னை: காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், தனது பதவியும் - தன் அரசும் நிலைத்தால் போதும் என்று முதலமைச்சர் செயல்படுவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரிய ஆணையம் பற்றி பொதுப்பணித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, தன் நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம் ஏற்பட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நெஞ்சில் மிதித்து
"காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது, ஒரு நிர்வாக நடைமுறை தொடர்பான நடவடிக்கை" என்றும், "விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது" என்றும் பூசி மெழுகி, பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம்.
காவிரி பிரச்சனை
காவிரி வழக்கில் இறுதி வெற்றி பெற்று, ‘காவிரி மேலாண்மை ஆணையம்' அமைப்பதற்கு வழிவகுத்தவர், கலைஞர். காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முதன்முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் ; காவிரிப் பிரச்சினை குறித்து கர்நாடகத்தோடு முதன்முதலில் பேச்சுவார்த்தை துவக்கியவர்; பிரச்சினை தீர்க்கப்படாமல் ஆண்டுகள் பல கடந்தபோது, ஒரு இறுதித் தீர்வு காண பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு முதலில் எடுத்துச் சென்றவர்; வி.பி. சிங் பிரதமராக இருந்த காலத்தில் காவிரிக்கு நடுவர் மன்றத்தைப் பெற்றுத் தந்தவர்;
கண்டனம்
10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணித்துறைக்கு அமைச்சராக இருந்தவன் - இந்த முக்கிய முடிவுகளில் எல்லாம் உடன் இருந்தவன் என்ற அடிப்படையில், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள பொறுப்பற்ற இந்த அறிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
நம் ஆணையம் முழுக்க முழுக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்கீமின் அடிப்படையில் செயல்படும் ஆணையம்! இந்த அடிப்படை கூட பொதுப்பணித்துறையின் செயலாளருக்கே தெரியவில்லை. இந்த லட்சணத்தில்தான் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது! "அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் கொண்டு வரப்பட்டது முற்றிலும் நிர்வாக நடவடிக்கை" என்றும், "இதர நிர்வாகங்களை மேற்கொள்ள, இது ஒரு வழக்கமான நடைமுறை" என்றும் முதன்மைச் செயலாளர் கூறியிருக்கிறார். அவருக்காக நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.
பொறுப்பற்ற முறை
மாநில அரசுகள் சம்பளம் கொடுக்கும் ஒரு ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்? இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.
அமைச்சரவை கூட்டம்
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆகவே எங்கள் தலைவர் கேட்டிருப்பது போல், மத்திய அரசின் இந்த முடிவை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.