அதிமுக சண்டை.. வேடிக்கை பார்க்கும் எதிர்கட்சிகள்.. ஆதாயத்துக்கு வியூகம் வகுக்கும் பாஜக
Recommended Video
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே போட்டி நிலவுகிறது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டியே அவரது ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அதிமுகவில் நடக்கும் இந்த சண்டையை மற்ற கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன. ஆனால் பாஜக அமைதியாக இந்த பஞ்சாயத்தை கவனித்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்ன ஓ பன்னீர்செல்வம் முதல்வாக இருந்தார். ஆனால் அவர் எதிர்க்கட்சியான திமுகவுடன் இணக்கமாக இருப்பதாக கூறி சசிகலா அவரை பதவியில் இருந்து தூக்கினார். இதனால் பாஜக உதவியுடன் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கினார் ஓ பன்னீர்செல்வம்.
இதன் விளைவாக அதிமுவில் பிளவு ஏற்பட்டது. ஒபிஎஸ் அணியில் குறிப்பிட்ட அளவு எம்பி எம்எல்ஏக்கள் இணைந்தனர். இதனிடையே சசிகலாவுக்கு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் அவரால் முதல்வராக பொறுப்பேற்க முடியவில்லை. அவருக்கு பதில் அவருடைய விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார். இதன் பிறகு சசிகலாவின் உத்தரவு காரணமக டிடிவி தினகரன் தலைமையில் அதிமுகவினர் செயல்பட்டனர்.
இணைந்த ஒபிஎஸ்
இதற்கிடையே அதிமுக கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டது. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் விடுதலையும் செய்யப்பட்டார். இதன்பின்னர் தினகரனை ஓரம்கட்டிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியை ஒரு கட்டத்தில் தனது அணியுடன் இணைத்தார். இதனால் டிடிவி தினகரன் 18 எம்எல்ஏக்களுடன் பிரிந்தும் சென்றார்.
கிடைத்தது அதிமுக கட்சி
அதன் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து இல்லாமல் செய்தனர். அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இரு பதவிகளை உருவாக்கினர். இதன்படி கட்சியில் பொறுப்புகள் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் இவர்களுக்கு கிடைத்தது. இப்போது எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்த எடுத்து வருகிறார்கள். எனினும் ஒபிஎஸ் -ஈபிஎஸ் சேர்ந்தார்களே ஒழிய, இவர்கள் அணியினர் அப்படியே தான் தனித்தனியாக இருக்கிறார்கள்.
போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்ககள்
இந்த விஷயம் மக்களவை தேர்தல் படுதோல்விக்கு பின் வெளிப்படையாகவே இப்போது தெரிகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ள எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவுக்கு குன்னம் எம்எல்ஏ ராமசந்திரன் ஆதரவு தெரிவித்து இருந்தார்.இதேபோல் பலரும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இவர்களில் யார் தலைவராக வருவார்கள் என்பது புதிராக உள்ளது.
வலிமையான தலைமை இல்லை
இதுஒரு புறம் எனில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே ஜெயலலிதாவைப்போல் கட்சியினரை முழுயைமாக கண்டித்து தங்கள் கண் அசைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகாரம் உள்ளவராக இல்லை. இவர்கள் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையின் படியே செயல்படுகிறார்கள். இதனால் யாரையும் கண்டித்து தண்டிக்கும் அளவுக்கு இவர்கள் இருவமே செயல்பட முடியவில்லை. நடவடிக்கை எடுத்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஒபிஎஸ் -ஈபிஎஸ்க்கு தெரியும்
இதனால் இன்று நடந்து வரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஒற்றை தலைமை என்ற முடிவு எடுத்தால் அதிமுகவின் ஆட்சிக்கே ஆபத்தில் போய் முடியும் என்பது ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்குமே தெரியும் எனவே பிரச்சனையை சமாளிக்கவே இருவரும் பார்ப்பார்கள்.
பாஜகவுக்கு ஆதாயம்
இதற்கிடையில் இந்த சண்டையை திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் ரசித்து வருகின்றன. ஒற்றை தலைமை பிரச்னையால் அதிமுக ஆட்சி தானாக கவிழும் என நம்பிக்கையில் உள்ளன. அதேநேரம் பாஜக மேலிடம் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதிமுக வலிமையான கட்சியாக இருந்தால்தான் சவாரி செய்ய எளிதாக இருக்கும் என்பது பாஜக கணக்கு. லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சின்னாபின்னமாக சிதறியதை அனுபவித்து தெரிந்து கொண்டது பாஜக. அதனால் அதிமுகவில் பிரச்சனை ஏற்படாமல் தினகரன் பின்னால் இருக்கும் தொண்டர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய வலிமையான தலைமையே தங்களது வளர்ச்சிக்கு உதவும் என்பதால் உன்னிப்பாக அமைதி காத்து வருகிறது பாஜக.