கொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் பீதியில் உள்ள நிலையில் அது தொடர்பான தகவல்களை தெளிவாகவும், முழுமையாகவும் தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழுமையற்ற தகவலை வெளியிட்டுள்ளதால், ஏற்கனவே அச்சத்தில் உள்ள மக்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். மேலும், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் குமரி மாவட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அலைபேசி மூலம் ஸ்டாலின் அழைத்து பேசியதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விவரம் பின்வருமாறு;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று பேர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களைத் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
அரசு அதுகுறித்து தெளிவான தகவல் தரவில்லை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத்தான் இறந்தார்களா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதுபற்றி அரசு தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என்றும்; இதுபோன்ற முழுமையற்ற தகவல்கள் மக்களை மேலும், மேலும் அச்சப்பட வைக்கும் என்றும் திமுக தலைவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த தலைமைச் செயலாளர் "சுகாதாரத் துறைச் செயலாளர் மூலம் விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும்" என்று கூறினார்.
இதன் மூலம் தலைமைச் செயலாளருக்கே குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த 3 உயிரிழப்புகள் பற்றிய விவரம் தெரியவில்லை என்பது வெளிப்படுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் மூலம் உரிய விளக்கம் விரைவில் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூவர் எப்படி உயிரிழந்தார்கள் என்ற கேள்வி வெகுஜன மக்களிடையேயும் எழுந்துள்ளது.