ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்... அதுவும் இப்படி.. எங்கு தெரியுமா? அதிர்ச்சியில் எடப்பாடியார் தரப்பு
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்... தாயின் தலைமகன்..என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கு கூட இவ்வளவு மோதல்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதற்கு வெளிப்படையாக இப்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது,
தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்ற வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. ஆனால் அதேநேரம் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் கொங்கு மண்டலததில் அதிமுகவிற்கு பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் வட மாவட்டங்களிலோ அல்லது சென்னை மண்டலத்திலோ, தென் மாவட்டங்களிலோ ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் தான் 66 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை பறிகொடுத்தது.
பாஜக காரணம்
அதிமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அதிமுகவின் ஒரு சாரார் கருதுவது பாஜக உடன் வைத்த கூட்டணி. இன்னொரு காரணம், வன்னியர்களுக்கு அளித்த தனி இடஒதுக்கீடு, இந்த இரண்டு காரணங்களால் அதிமுக தோற்றதாகவே அதிமுகவின் ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.
இடஒதுக்கீடு காரணம்
இடஒதுக்கீடு விவகாரத்தால் தான் தென் மாவட்டங்களில் அதிமுக தோற்றதாகவும், வட மாவட்டங்களில் பிற சாதியினர் மொத்தமாக எதிர்த்து வாக்களித்து அங்கும் தோல்வியை தந்துவிட்டனர் என்று அதிமுகவின் தென் மாவட்ட தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். குறிப்பாக ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி எடுத்த இடஒதுக்கீடு முடிவே தோல்விக்கு காரணம் என்று அதிமுக கூட்டத்தில் குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியானது.
எதிர்கட்சி தலைவர்
இப்படி குற்றச்சாட்டுகள் முன்வைக்க முதன்மையான காரணம் கட்சியில் காணப்படம் இரு தலைமைகள். எதிர்க்கட்சி தலைவர் என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை கூட்டம்
இதை உறுதி செய்யும் விதமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக மாற்றி மாற்றி கோஷங்களை எழுப்பிக் கொண்டனர். மேலும் ஜெயலலிதா நினைவிடத்திலும் தொண்டர்கள் மாறி மாறி குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள் அன்று கூட்டம்
இதனால் அன்றைய கூட்டம், அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுக்காமலேயே நிறைவு பெற்றது. திங்கட்கிழமை காலை 9.30மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கி அப்போது தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் மோதல்
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி தான் எதிர்க்கட்சி தலைவராக பொறுபேற்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு பதிலடியாக ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக மோதும் நிலை காணப்படுகிறது.
தாயின் தலைமகனே
இந்நிலையில் போஸ்டர்களிலும் இரு தரப்பினும் இப்போது மோதிக்கொள்ள தொடங்கி உள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்... தாயின் தலைமகன்.. போஸ்டர்களை வில்லிவாக்கம் பகுதி அதிமுகவினர் ஓட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருவருமே எதிர்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இதனால் கட்சியில் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று அதிமுகவினர் சிலர் அச்சம் அடைந்துள்ளனர்.