அறிவாலயம் வந்த யஷ்வந்த் சின்ஹா.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
பாஜக சதிக்கு பலியாகி விடாதீர்கள்.. ஜெகன்மோகன், நவீன் பட்நாயக் உள்ளிட்டோருக்கு திருமா எச்சரிக்கை!
இதனைத்தொடர்ந்து மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கேரளா சென்ற அவர், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.
சென்னை வருகை
இந்த நிலையில், இன்று சென்னை வந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். அவரை பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ, விசிகவின் சட்டப்பேரவை தலைவர் சிந்தனை செல்வன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா விவகாரம் பற்றி சின்ஹா
தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகாராஷ்டிராவில் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் புதிதாக பதவியேற்கும் அரசு நீண்ட நாள் நீடிக்காது என்பதால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்கவில்லை. ஆளுநர்கள் என்பவர்கள் குடியரசு தலைவரின் பிரதிநிதிகள் தான். ஆளுநர்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். பல மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கை கொண்டு உள்ளனர்.
பாஜக அரசு மீது விமர்சனம்
மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை துளியும் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் மத்திய அரசின் செயல்பாடுகளை கவனிப்பேன். ஆளுநர்கள் மாநில அரசுகளை மரியாதை குறைவாக நடத்துவதை அனுமதிக்க மாட்டேன். மத்திய அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கடந்த காலங்களிலும் குரல் கொடுத்துள்ளேன். வரும் காலத்திலும் அவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும். இப்போதுள்ள மத்திய அரசு பல்வேறு பல மரபுகளை மீறுகிறது.
தமிழ்நாடு பற்றி யஷ்வந்த் சின்ஹா
தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான சிறப்பு உள்ளது. தமிழ்நாடு என்றும் அதன் உரிமைகளுக்கும் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் போராடும். முன்னோர்கள் நமக்குக் கொடுத்தவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்தத் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ, மத்திய அரசுக்கு எதிரான எனது போராட்டம் நண்பர்களான உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடரும் என்று தெரிவித்தார்.