அரசியலில் நின்று விளையாடும் எடப்பாடி... ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கும் எதிர்க்கட்சிகள்
சென்னை: பல்வேறு விவகாரங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகங்களை உடைக்க முடியாமல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திணறுகின்றன.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றவுடன் அவரை குறைத்து மதிப்பீடு செய்தவர்கள், இன்று அவரின் செயல்பாடுகளை கண்டு திகைத்து நிற்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வகுத்த வியூகம் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி? இரட்டை மனநிலையில் நிர்வாகிகள்
எதிர்க்கட்சிகள் திணறல்
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நிலைப்பாடு திமுகவுக்கு கடும் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் அளித்துள்ளது. ஊரகம், நகர்புறம் என இப்படி பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை திமுக. இந்நிலையில் எடப்பாடி வியூகத்தை உச்சநீதிமன்றம் சென்றாவது தவிடு பொடியாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் செயல்பாடுகள்
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற போது, அவரை குறைத்து மதிப்பீடு செய்த பலரும் இன்று அவரது செயல்பாடுகளை கண்டு மிரண்டு போயுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பாரா எடப்பாடி பழனிசாமி என விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று அவரது அசாத்திய துணிச்சலான செயல்பாடுகளை கண்டு எதிர்க்கட்சிகள் வியந்து பார்க்கின்றன.
தவிப்பு
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை எதிர்த்தால் மக்களின் கோபத்துக்கு ஆளாக கூடும் என்பதால், எதிர்க்கட்சிகள் அதைப் பற்றி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றன.
உட்கட்சி விவகாரம்
ஆட்சியில் மட்டுமல்லாமல் கட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி நிற்கின்றது. இதற்கு உதாரணமாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வரை வேட்பாளர்கள் தேர்வில் அவரது பங்கை குறிப்பிடலாம்.