கூண்டோடு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்... ஆளுநர் உரையை புறக்கணிக்க என்ன காரணம்?
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கியவுடன் அதனை புறக்கணித்து திமுக, காங்கிரஸ், மனிதநேய ஜனநாயக கட்சி, அமமுக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
குடியுரிமைச் சட்டத்துக்கு அதிமுக அரசு ஆதரவு அளித்ததால் அதனை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், கே.ஆர். ராமசாமி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அதகளத்தில் ஈடுபட்டதால் ஆளுங்கட்சி தரப்பு சற்று அதிர்ச்சியடைந்துள்ளது.
காரணம் என்ன?
குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அதிமுக அரசு துரோகம் இழைத்ததால் அதனைக் கண்டித்து திமுக வெளிநடப்பில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் காலதாமதம் செய்வதையும் தாங்கள் கண்டிப்பதாக அவர் கூறினார்.
வாபஸ் பெறுக
குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என தமிழக அரசு குரல் கொடுக்கவேண்டும் என்றும், அந்தச் சட்டத்திற்கு அளித்த ஆதரவை அதிமுக எம்.பிக்கள் வாபஸ் பெற வேண்டும் எனவும் கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
டிடிவி தினகரன்
திமுக, காங்கிரஸை தொடர்ந்து அமமுக சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமைச் சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்த காரணத்தால் தனது எதிர்ப்பை அவையில் பதிவு செய்யும் நோக்கில் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.
கருப்புச் சட்டை
இதனிடையே கருப்புச் சட்டை அணிந்தவாறும், அந்த சட்டையில் NO-CAA, NO-NRC என்ற வாசகங்களை தாங்கியும் சட்டப்பேரவைக்கு வந்திருந்தார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. இந்திய தேசியக் கொடியை கையில் பிடித்தவாறு அவர் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கரும் வெளிநடப்பு செய்தார்.