வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தஞ்சையிலும் கொந்தளித்த விவசாயிகள் - ரயில் நிலையம் முற்றுகை
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை ரயில் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சையில் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த 7 நாட்களாக பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் நாடுமுழுவதும் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
டெல்லி புறநகர்ப்பகுதியான புராரியில் சந்த் நிரங்கரி சமகம் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் களத்தில் ஆதரவாக இணைந்துள்ளனர்.
வட இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சையில் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அவர்கள் விவசாயிகளை அழிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, போராட்டக்கார்கள் பேரணியாக சென்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.