ஓபிஎஸ் மீண்டும் தனி ஆவர்த்தனம்- நீடிக்கும் அதிருப்தி- அதிமுக லெட்டர் பேடு இல்லாமல் திடீர் அறிக்கை!
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், அதிமுக லெட்டர் பேடு இல்லாமல் தனியே அறிக்கை வெளியிட்டு மீண்டும் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார் மாஜி துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம்.
அதிமுகவில் தற்போதைய உயர்ந்த பதவியே ஓ. பன்னீர்செல்வம் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவிதான். அவருக்கு இணையாகத்தான் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
இதனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்தே கூட்டறிக்கையாக அதிமுக தொடர்பான அத்தனை அறிக்கைகளையும் இதுவரையில் வெளியிட்டு வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நடைமுறையை ஓபிஎஸ் புறக்கணிக்க தொடங்கிவிட்டார்.
லத்தியுடன் குவிந்த போலீஸ்.. அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
அதிமுக கூட்டம்
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுத் தர முடியாது என எடப்பாடி பழனிசாமி மல்லுக்கட்டினார். இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை.
லெட்டர் பேடு புறக்கணிப்பு
இதில் உச்சகட்ட கோபத்தில் இருந்த ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு லாக்டவுன் தொடர்பான ஒரு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதிமுக லெட்டர் பேடு இல்லாமல் தனியே ஒரு தாளில் ஓ. பன்னீர்செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர், அதிமுக என்று மட்டும் இடம்பெற்றிருந்தது. இது அப்போதே ஈபிஎஸ் தரப்பை கோபப்படுத்தியது.
2-வது முறையாக மோதல்
இதனைத் தொடர்ந்து இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்ட 3 மணிநேரம் நடைபெற்றும் முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாய் இருந்தது. ஒரு கட்டத்தில் எடப்பாடி தரப்பு, எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் என அறிவித்தது. இது தொடர்பான அறிக்கை ஒன்றில் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்தும் இருந்தது.
மீண்டும் தனி ஆவர்த்தன அறிக்கை
ஆனால் இந்த கூட்டறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே தமது ட்விட்டர் பக்கத்தில் வழக்கம் போல அதிமுக லெட்டர் பேடு இல்லாமலேயே மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் உயிரிழந்துள்ள முன்களப் பணியாளர்களான மருத்துவர் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஓபிஎஸ்.
அதிமுகவில் மோதல்
அதிமுகவில் நிலவும் கடுமையான மோதலை வெளிப்படுத்தும் வகையிலேயே அக்கட்சியின் லெட்டர் பேடை, அதுவும் கட்சியின் முதன்மையான பொறுப்பில் இருக்கும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் புறக்கணித்து வருவது வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது. ஓபிஎஸ்-ன் அடுத்தடுத்த போக்குகள் அதிமுகவில் செங்குத்து பிளவுக்கு பிள்ளையார் சுழி போடப்படுவதாகவே தெரிகிறது.