ஓபிஎஸ் இன்று அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்? ராயப்பேட்டை ஆபீஸுக்கு சீல் வைக்கப்படுமா?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தமது ஆதரவாளர்களுடன் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியதற்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் இன்றைய கூட்டத்தை கூட்டுவார் என கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டார். எடப்பாடி பழனிசாமிக்கே பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடியான 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் ஜூலை 11-ந் தேதி புதிய பொதுக்குழு கூடும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதற்கு ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவை விட்டு வெளியேறினர். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு கடுமையாக வலுத்துள்ளது.
இந்நிலையில் அதிமுக தலைமை நிலைய செயலாளரான எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டினார். இந்த கூட்டத்தில் மொத்தம் உள்ள 77 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றனர். ஆனால் ஒருங்கிணைப்பாளரான தமது ஒப்புதல் இல்லாமல் இந்த கூட்டம் கூட்டப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் அறிக்கை மூலம் கூறியிருந்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்ஸை துரோகி என கடுமையாக விமர்சித்தார். அத்துடன் ஜூலை 11-ந் தேதி திட்டமிட்டடி பொதுக்குழு நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் மாலையில் புதிய பேனரும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தென்மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஓபிஎஸ் நேற்று சென்னை திரும்பினார்.
23 பாயிண்டுகள்! அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த அறிக்கையின் முழுவிபரம்!
அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டுகாலம் செல்லுபடியாகும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் மிக விரிவான மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ஓபிஎஸ். அதேபோல் அதிமுக தொடர்பான வழக்கில் தம்மையும் சேர்க்க வலியுறுத்தும் கேவியட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.
Recommended Video
இதனையடுத்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்லக் கூடும் என தெரிகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என 2 பொறுப்புகள் ஓபிஎஸ் வசம் உள்ளது. எடப்பாடி தரப்பு சொல்வதைப் போல ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்றாலும் அதிமுகவின் பொருளாளர் என்ற அடிப்படையில் கட்சி அலுவலகம் செல்ல ஓபிஎஸ்க்கு உரிமை உண்டு. ஓபிஎஸ், அதிமுக அலுவலகம் செல்லும் போது பலத்தை காட்ட ஆதரவாளர்கள் குவிக்கப்படுவர்; அதேநேரத்தில் ஈபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் பதற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் அதிமுக தலைமை அலுவலகத்தை முன்வைத்து மோதலில் ஈடுபடும் நிலையில் அதிமுக ராயப்பேட்டை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட வாய்ப்புகளும் ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.