ஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் பலே திட்டம்!
Recommended Video
சென்னை: இரண்டாவது முறையாக அதீத பலத்துடன் ஆட்சியை பிடித்தப் பிறகு மாற்றுக் கட்சியினரை பலவீனப்படுத்தும் பணியில் பாஜக வெகு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ்-சை வைத்து பாஜகவை பலப்படுத்தும் பணியில் அமித்ஷா திட்டமிட்டு வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சட்டமன்றம் முடிந்த கையோடு டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஓபிஎஸ் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பாஜகவின் புதிய செயல்தலைவர் நட்டாவும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், தனது உடல்நிலை குறித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள தயாராவது குறித்து ஓபிஎஸ் அமித்ஷாவிடம் பேசினார் என்றும் வேலூர் தேர்தல் குறித்து பேசினார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதற்காக மட்டும் ஓபிஎஸ் அமித்ஷாவை சந்திக்கவில்லை என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
ஓபிஎஸ் - சை வைத்து அவரும் பாஜகவை வளர்க்க பலே திட்டம் போட்டுள்ளதாக பாஜகவினர் கூறுகிறார்கள். மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்த பிறகு மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் கொண்டு வருவதில் பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் பாஜக பக்கம் தாவி விட்டனர். அதுபோல கர்நாடகாவில் ம.த.ஜ. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் தங்கள் கூட்டணி அரசுக்கே குடைச்சல் கொடுக்கும் அளவுக்கு அங்கு ஆபரேஷன் தாமரையை உக்கிரமாக செயல்படுத்துகிறது பாஜக. அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது என்பது நடுநிலையாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்து.
அதுபோல கடந்த தேர்தலின்போதே மேற்கு வங்கத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களோடு தொடர்பில் இருந்து வருவதாக கூறினார். மக்களவை தேர்தலில் பாஜக வென்றுவிட்டால் தங்களுக்கு இரண்டு லட்டுகள் கிடைக்கும் என்று பேசினார். அதாவது விரைவில் மாநில ஆட்சியையும் தாங்களே கைப்பற்றி விடுவோம் என்ற பொருளில் அவர் அவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த முகுல்ராயை பாஜக வளைத்தது.
இதன் பிறகு முகுல் ராய் மூலமாக திரிணமுல் காங்கிரஸ் உட்பட வேறு சில கட்சிகளை சேர்ந்தோரும் பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதியில் 18 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதன் பின்னர் மேற்கு வங்கத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, கம்யுனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு எம்.எல்.ஏ, மற்றும் 50 திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முகுல்ராய் முன்னிலையில் பாஜக- வில் இணைந்தனர்.
இப்படி மேற்கு வங்கத்தில் முகுல்ராயை வைத்து மாற்றுக் கட்சியினரை பாஜகவில் இணைக்கும் அதே பாணியை தமிழகத்திலும் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்காகவே இன்றைய அமித்ஷா - ஓபிஎஸ் சந்திப்பில் இவர்களுடன் பாஜக செயல் தலைவர் நட்டாவும் உடன் இருந்துள்ளார்.
அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதும் ஓபிஎஸ், தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க விடாமல் செய்தது ஈபிஎஸ் தான் என்ற எண்ணம், தன்னை சேர்ந்தவர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் இருப்பது, நடந்து முடிந்த தேர்தலில் கூட தனது ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் (ரவீந்திரநாத் தவிர) யாருக்கும் சீட் தராமல் ஒதுக்கியது, மீண்டும் சசிகலா வந்துவிட்டால் தனது நிலை என்று எல்லாவற்றையும் ஓபிஎஸ் - சும் கணக்கு போட்டு வருகிறார் என்றே கூறுகிறார்கள் ஓபிஎஸ் -ன் ஆதரவாளர்கள் அப்படி இருக்கும்போது அமித்ஷாவின் திட்டம் விரைவில் தமிழகத்தில் துவங்கும் என்றே தெரிகிறது.