ஆளுநர் அளித்த தேநீர் விருந்து.. பங்கேற்காத ஓபிஎஸ் - இபிஎஸ்.. ஓ இதுதான் காரணமா?
சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள், அதிமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. எனினும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ பன்னீர் செல்வம் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
குடியரசு தினவிழாவின் போது முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேநீர் விருந்து நடைபெற்றது.
ஈரோடு இடைத்தேர்தல்.. வேட்பாளர் அறிவிப்பு எப்போது? குலதெய்வ வழிபாட்டுக்கு பின் ஓபிஎஸ் சொன்ன பதில்!
ஆளுநரின் தேநீர் விருந்து
தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்து இருந்தார். ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. எனினும், ஆளும் திமுக பங்கேற்பதாக அறிவித்தது. அதன்படி, குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.
மு.க ஸ்டாலின் பங்கேற்பு
முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.. ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் வரவேற்றார். அதன்பிறகு அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை விழாவில் பங்கேற்ற அனைவரும் கண்டு ரசித்தனர்.
கலந்துகொள்ளாத ஓபிஎஸ்-இபிஎஸ்
தேநீர் விருந்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ-க்களும் பங்கேற்றனர். அதிமுக கூட்டணி கட்சிகளும் பங்கேற்றன. அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் பங்கேற்று இருந்தனர். எனினும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
காரணம் என்ன?
ஈரோடு கிழக்குக் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பணிகளுக்காக ஈரோட்டில் முகாமிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இடைத்தேர்தல் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் எடப்பாடி பழனிசாமி இன்றைய ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து செண்பகத்தோப்பில் அமைந்துள்ள அவரது குலதெய்வம் பேச்சியம்மன் கோவிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். எப்போதும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஓபிஎஸ்ஸின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் இருவரும் கவனம் செலுத்தி வருவதால் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.