சசிகலா விவகாரம், அதிமுக மோதல்... டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ், ஈ..பி.எஸ் நாளை சந்திப்பு
சென்னை: பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி (ஈ.பி.எஸ்) ஆகியோர் நாளை காலை டெல்லியில் சந்திக்கின்றனர். ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் சென்றுவிட்ட நிலையில் இன்று இரவு 9 மணி விமானத்தில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார்.
அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான அதிகாரப் போட்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில் அதிமுகவில் நம்பர் 2 இடத்தில்தான் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வத்துக்கு மிக அதிகபட்சமாக 2 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தரும் நிலையில் உள்ளனர். இதனால் தம்மை வலுப்படுத்திக் கொள்ள அதிமுகவில் சசிகலாவை சேர்க்கலாம் என்பது ஓ.பி.எஸ். நிலைப்பாடு.
உடனடி ஆக்ஷன்.. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு!
சசிகலாவுக்கு எடப்பாடி எதிர்ப்பு
ஆனால் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே கூடாது; அப்படி சேர்த்தால் கட்சியில் தாமும் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க வேண்டும்; அத்துடன் சசிகலா மீண்டும் கடந்த கால அணுகுமுறைகளை கையில் எடுத்தால் அதை ஏற்கவும் முடியாது என்பதில் ஈ.பி.எஸ். உறுதியாக இருக்கிறார்.
சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
இதனால் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என அதிமுக கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற சொன்னார் ஈ.பி.எஸ். இந்த இடத்தில் இருந்து ஈ.பி.எஸ் சறுக்கவும் தொடங்கினார். அவர் நினைத்தது போல் அனைத்து அதிமுக மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.
சசிகலாவுக்கு ஆதரவு குரல்கள்
அத்துடன் சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்த்து கொள்ளலாமே என ஈ.பி.எஸ். ஆதரவு முகாமிலேயே வலியுறுத்தல்களும் வரத்தொடங்கின. சசிகலாவோ தம் பங்குக்கு அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபஏசியில் பேசி அதன் ஆடியோக்களை ஊடகங்களுக்குக் கொடுத்து வருகிறார். அந்த ஆடியோக்களில் ஓ.பி.எஸ்-க்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் சசிகலா பேசி வருகிறார்.
திமுக அரசு நடவடிக்கை
இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை; திமுகவினரின் ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் எங்களிடமும் இருக்கிறது என்கின்றனர் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்
இந்த நிலையில் திடீரென ஓ.பி.எஸ். டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருடன் அதிமுக உட்கட்சி விவகாரம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இன்னொரு பக்கம் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில்தான் ஓ.பி.எஸ். டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
மோடியுடன் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். நாளை சந்திப்பு
தற்போது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். இருவரையுமே பிரதமர் மோடி டெல்லிக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஓ.பி.எஸ். டெல்லி சென்றுவிட்டதால் இன்று இரவு 9 மணிக்கு ஈ.பி.எஸ். டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் பிரதமர் மோடியை நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருவரும் சந்தித்து பேச இருக்கின்றனர். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். இருவரையும் பிரதமர் மோடி டெல்லிக்கு வரவழைத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இருவரும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.