சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி
Recommended Video
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்களுடன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் சென்றனர்.
இரு தலைவர்கள் நினைவிடங்களுக்கும் சென்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும், மலர் வளையம் மற்றும் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்களது தலைவர்களின் நினைவிடங்களை தொட்டு வணங்கினர்.
அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் தங்கள் தலைவர்களது நினைவிடங்களில் அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினர்.
தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த ஜூன் 28-ம் தேதி துவங்கி 16 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்தும் மானிய கோரிக்கைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களில் 94 பேர் அனைத்து நாள்களும் அவைக்கு வந்துள்ளதாக சபாநாயகர் தனபால் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார். சபாநாயகர் தனபால் வழக்கம் போல கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அமைச்சர்கள் புடை சூழ எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.