"ஜோரா" கை தட்டுங்களேன்... அண்ணன் மட்டும் தட்றாருல்ல ! பட்ஜெட் உரையின்போது கை தட்ட சொன்ன ஓபிஎஸ்!!
சென்னை: இடைக்கால பட்ஜெட் உரையில் வனத்துறை குறித்த அறிவிப்பின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கை தட்டி வரவேற்றார். அப்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அனைவரையும் கை தட்டுமாறு கூறினார்.
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் மீது உரையாற்றினார். அவர் கூறுகையில் சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்துடன் மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
பராமரிப்பு
இந்த திட்டத்தை 2011- 2012 ஆம் ஆண்டில் இருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசின் நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் தரம் குன்றிய வனப்பகுதிகளில் நடப்பாண்டில் நடப்பட்டு வரும் 72 லட்சம் மரக்கன்றுகள் உள்பட 6.12 கோடி மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நிறுத்திய ஓபிஎஸ்
இவ்வாறு ஓ பன்னீர் செல்வம் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைதட்டினார். மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் கைதட்டவில்லை. இதை ஓபிஎஸ் கவனித்து தனது பேச்சை நிறுத்தினார்.
அவையில் சிரிப்பலை
உடனே அனைவரையும் பார்த்து " கைதட்டுங்களேன்... பாவம் அண்ணன் (திண்டுக்கல்லார்) மட்டும்கை தட்டிக் கொண்டிருக்கிறார்........." என கூறிவிட்டு ஓபிஎஸ் சிரித்தார். பின்னர் அனைவரும் சிரித்துவிட்டு கை தட்டினர். ஓபிஎஸ்ஸும் தனது பட்ஜெட் வாசிப்பை தொடர்ந்தார்.
சமூகவலைதளங்கள்
இந்த காமெடியான சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலானது. கை தட்டுவதற்கு அங்க என்ன வித்தையா காண்பிக்கிறீர்கள் என சமூகவலைதளவாசிகள் கேள்வி எழுப்பினார்கள். உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கு எதற்கு கைதட்டல் என நெட்டிசன்கள் கேட்கிறார்கள். மேலும் சிலர் பட்ஜெட் வாசிப்பின்போது சுவாரஸ்யம் ஏற்படுத்தவே ஓபிஎஸ் இப்படி பேசியுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.