கெட்டவங்களுக்கு அள்ளி தந்து கைவிடுவான் ஆண்டவன்- ரஜினி டயலாக்கை முன்வைத்து திமுக மீது ஓபிஎஸ் தாக்கு
சென்னை: கெட்டவர்களுக்கு நிறைய அள்ளிக் கொடுத்தாலும் இறைவன் அவர்களை கைவிட்டுவிடுவான் என ரஜினிகாந்த் பட வசனம் மூலம் திமுக தலைவர் ஸ்டாலினை சாடினார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
இஸ்லாமிய சமூகம் மேம்பாட்டுக்காக ஏராளமான நன்மைகளைச் செய்தவர் ஜெயலலிதா வழியில், அவரது பணிகளைத்தான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம்.
இஸ்லாமியர்களை நேசிப்பதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு நிகரே இல்லை. பொய்யைக் கூட உண்மை என்று நம்பி விடுகின்ற சூழல் சில நேரங்களில் நடந்து விடுகிறது.
என்றுமே தாகம் தீர்க்கும் தண்ணீர் அ.தி.மு.கதான் என 9 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் நிரூபித்துள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்பது தமிழக மக்களின் நிலைப்பாடு.
இந்தி திணிப்பு: கஸ்தூரி ரங்கன் அறிக்கையை முச்சந்திதோறும் தீயிட்டு கொளுத்துவோம்- வைகோ
தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது. நல்லவர்களை இறைவன் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார், கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார் ஆனால் கைவிட்டுவிடுவார். ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் சிலரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.