ஒபிஎஸ் மகனை வெற்றி பெற செய்ய வாக்கு எந்திரங்களை மாற்ற முயற்சி.. திமுக பகீர்!
சென்னை: தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்ததில் சதித்திட்டம் இருப்பதாக திமுகவின் ஆர்எஸ் பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இந்நிலையில் திமுகவின் ஆர்எஸ் பாரதி தமிழக தலைமை அதிகாரியான சத்தியபிரதா சாஹுவை சென்னையில் இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை... காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்
அதிமுக முயற்சி
அவர் பேசியதாவது, கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டதில் சந்தேகம் உள்ளது. தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற அதிமுக முயற்சி செய்கிறது.
மகனை ஜெயிக்க வைக்க
தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றவே வாரணாசியில் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்ததாக சந்தேகம் உள்ளது. தனது மகனை வெற்றி வெற்றி பெற செய்யவே ஓபிஎஸ் வாக்கு எந்திரங்களை மாற்றிருக்கிறார்.
சதி நடந்துள்ளது
வாக்கு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெளிவான பதில் இல்லை. ஆகையால் இதில் ஏதோ சதி நடந்துள்ளது. இவ்வாறு ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
டிஜிபி விளக்கம்
இதனிடையே ஆர் எஸ் பாரதியின் கருத்துக்கு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது என்றும் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.