முதல்வர் பதவிக்காக ஓபிஎஸ் யாகம் நடத்தியுள்ளார்.. ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு!
தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சென்னை: தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் இன்று அதிகாலை யாகம் நடத்தப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அறை புதுப்பிக்கப்பட்டதால் யாகம் நடத்தியதாக தகவல்கள் வருகிறது. இந்த யாகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சோழிங்கநல்லூர் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஸ்டாலின் தனது பேச்சில், சென்னை தலைமை செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். அதிமுக அரசை காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். மீண்டும் முதல்வர் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருகிறார்.
எடப்பாடி சிறைக்கு சென்றால் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார். கோட்டை அனைத்து மதத்தினருக்கும் சமமானது அங்கு யாகம் நடத்த அதிகாரம் கொடுத்தவர் யார்?. தலைமை செயலகத்தில் யாகம் நடத்த அது என்ன ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்தா?
ஆளும் அதிமுக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும். கொடநாடு விவகாரத்தில் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. முதல்வர் இதில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர், துணை முதல்வர் பதவி விரைவில் காலியாகும். இதை சொன்னால் என் மீது முதல்வர் வழக்கு போடுவார்கள். என் மீது முடிந்தால் முதல்வர் வழக்கு பதியட்டும், நான் அதற்குத்தான் பேசுகிறேன். முடிந்தால் வழக்கு போடட்டும், சவால் விடுகிறேன் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.