அதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு
சென்னை: அதிமுகவில் அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மீண்டும் வாய்ப்பூட்டு போட திட்டமிட்டுள்ளது கட்சித் தலைமை.
ஜெயலலிதா இருந்தவரை அதிமுக நிர்வாகிகளும் சரி, அமைச்சர்களும் சரி ஊடகங்களில் பேட்டி கொடுத்ததாக வரலாறு இல்லை. களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பல செய்தியாளர்களுக்கு அமைச்சர்களின் குரல் எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. இப்படித்தான் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்த நிலை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஊடகங்களில் மெதுவாக கருத்துக்கூறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் யார் யாரை மிஞ்சுவது என்கிற வகையில் போட்டி போட்டு கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். இது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் செய்தித்தொடர்பாளர்களை தவிர வேறு யாரும் ஊடகங்களில் பேட்டி கொடுக்க வேண்டாம் என தடை போடப்பட்டது.
இந்நிலையில், அதிமுக சீனியரான பொன்னையன் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பேசும் போது, காற்றின் மீது தான் வழக்குப்போட வேண்டும் என்றும், பேனர் வைத்த அதிமுக நிர்வாகியா கையை வைத்து பேனரை தள்ளிவிட்டார் எனவும் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இளம்பெண் சுபஸ்ரீ பேனர் விழுந்து உயிரிழந்ததால் மக்கள் ஆளுங்கட்சி மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ள நிலையில் பொன்னையன் அது குறித்து கருத்து தெரிவித்து மீண்டும் அந்தச்சம்பவத்தை கிளறிவிட்டுள்ளார்.
பொன்னையன் கருத்து ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.சை கடுகடுக்க வைத்ததாம். இடைத்தேர்தல் நேரத்தில் இவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என நொந்துகொண்டார்களாம். ஆளாளுக்கு இப்படி பேசினால் அது தேர்தலில் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் ஜெயலலிதா பாணியை கடைபிடிப்பது என ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் முடிவெடுத்துள்ளார்களாம்.
தலைமை அனுமதியின்றி ஊடகங்களில் பேசக்கூடாது என விரைவில் அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.