நம்மை வீழ்த்த நினைப்பவர்களுக்கு இடம் தரமால் ஒற்றுமையோடு செயல்படுவோம் - அஇஅதிமுக அறிக்கை
ஊடகங்களில் கருத்துப்பரிமாற்றத்தை சொல்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறியுள்ளனர்.
சென்னை: அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். ஊடகங்களில் கருத்துப்பரிமாற்றத்தை சொல்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு சலசலப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் நம்மை வீழ்த்த நினைப்பவர்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றுபட்டு இணைந்து செயல்படுவோம்.
மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றிடுவோம் எனவும் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று கடந்த சில நாட்களாக சர்ச்சை உருவானது. காலை முதல் பரபரப்பாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அதிமுக சார்பில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையின் முழு விபரம்:
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக மக்கள் மீது கொண்ட பேரன்பினாலும் தமிழக மக்கள் புரட்சித்தலைவர் மீது கொண்ட பாசத்தினாலும் அஇஅதிமுக உருவானது. ஜெயலலிதா கடுமையாக உழைத்து அதிமுகவை பெரும் இயக்கமாக மாற்றி 35 ஆண்டுகள் கட்டுக்கோப்போடு கட்சியை காப்பாற்றி நம்மையெல்லாம் ஆளாக்கி நம் கைகளிலே கட்சியையும் ஒப்படைத்துள்ளார்.
எனது காலத்திற்குப் பிறகும் அதிமுக 100 ஆண்டுகள் இருக்கும் என்று சட்டசபையில் ஜெயலலிதா சூளுரைத்தார்கள். பாரம்பரியம் மிக்க
அதிமுக தொண்டர்களின் முயற்சியால் வளர்ச்சியடைந்து வருகிறது. அதிமுகவின் ஆட்சியை அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.
நாம் தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளது அதை மனதிலே கொண்டு மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது. கடந்த 4 ஆண்டுகாலமாக சிறப்புற ஆட்சி நடத்தியிருக்கிறோம். இனியும் தொடர் வெற்றி பெற ஒற்றுமையோடு உழைக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் சிலர் கூறிய கருத்துக்கள் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போல ராணுவக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் கருத்து சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சியின் கொள்கை முடிவுகளையும் கூட்டணி பற்றிய கருத்துக்களையும் ஆலோசனை நடத்தி தொண்டர்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முடிவுகளை வெளியிடுவோம். சிறு சலசலப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் நம்மை வீழ்த்த நினைப்பவர்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒன்றுபட்டு இணைந்து செயல்படுவோம். கட்சிப்பணிகளில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்துங்கள்.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை: ராணுவ கட்டுப்பாடு தேவை... எடப்பாடி பழனிசாமி.. பன்னீர் கூட்டறிக்கை!!
கட்சிப்பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் எந்த முன்யோசனையும் இன்றி கட்சியின் தலைமையின் ஒப்புதல் இன்றி தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதை தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துப்பரிமாற்றங்களை சொல்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து கையெழுத்து போட்டிருக்கின்றனர்.