டிசம்பரில் அதிமுக பொதுக்குழு...? தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவது பற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசித்துள்ளார்களாம்.
கோவையை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சிக்கலாக திகழ்கிறாராம். அவர் தொடர்ந்த வழக்கு தான் அதிமுக தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.
இருப்பினும் கட்சியின் மூத்த முன்னணி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அடுத்த மாதம் பொதுக்குழுவை நடத்துவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
காவிரி ஆணைய அனுமதி மேகதாது அணை கட்ட முடியாது: ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் திட்டவட்டம்
முக்கிய நிகழ்வு
அரசியல் கட்சிகளை பொறுத்தவரை பொதுக்குழு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள நிர்வாகிகள் தங்கள் மனக்குமுறலை கொட்டக் கூடிய இடமாக அது விளங்குகிறது. அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் வாய் திறந்து பேசியதில்லை. வெறுமனே கூட்டத்தில் கலந்துகொண்டு ஏற்கனவே வடிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றும் சம்பிரதாய நிகழ்வு நடைபெறும்.
நிர்வாகிகள் பேச்சு
ஆனால் ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் பொதுக்குழு என்பதால், நிச்சயம் அதிமுக நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை இந்தக் கூட்டத்தில் கொட்டக் காத்திருக்கிறார்கள். இது தேவையற்ற தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என நினைக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., பொதுக்குழுவுக்கு முன்பாகவே நிர்வாகிகளை எப்படி கட்டுப்படுத்துவது என யோசனையில் உள்ளார்களாம்.
பொதுக்குழு திட்டம்
அதிமுக பொதுக்குழுவை ஜெயலலிதா இருந்தவரை டிசம்பர் மாதம் இறுதியில் தான் நடத்துவார். புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்பாக நடத்திவிட்டு, நிர்வாகிகளுக்கு புத்தாண்டு, பொங்கல் வாழ்த்தை கூறி அனுப்பி வைப்பார். இப்போது, அதேபாணியில் புத்தாண்டு நெருக்கத்தில் பொதுக்குழுவை நடத்த முதலில் திட்டமிடப்பட்டதாம். பின்னர் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் உள்ளதால் முன்கூட்டியே பொதுக்குழுவை நடத்தி முடித்து விடலாம் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நினைக்கிறார்களாம்.
பொதுக்குழு குழப்பம்
அதிமுக பொதுக்குழு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றதோடு சரி, அதன்பின்னர் 2018-ம் ஆண்டு பொதுக்குழு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் இன்னும் பொதுக்குழு நடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இருப்பினும் அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைமை, டிசம்பரில் நிச்சயம் பொதுக்குழு தேதியை அறிவிக்கும் என்கிறார் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.