நல்லவர்கள் கையில் உள்ளாட்சி பதவிகள்.. ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிக்கை
சென்னை: தமிழகத்தில் வன்முறைக்கு இடம் தராத அன்பின் வழி நின்ற ஆட்சி அமைதியாக நடக்கிறது என்றும் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக அறிக்கை
27ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில் ஊரக பகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆரம்ப புள்ளி
அந்த அறிக்கையில், மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேராகவும், ஆரம்பப்புள்ளியாகவும் திகழும் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நல்லவர்கள் கையில்
ஊரகப்பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் தொடர அதிமுகவின் வெற்றி இன்றியமையாதது. தமிழகத்தில் வன்முறைக்கு இடம் தராத அன்பின் வழி நின்ற ஆட்சி அமைதியாக நடக்கிறது. தீய சக்திகளை ஒழித்து, நல்லவர்கள் கையில் உள்ளாட்சி பதவிகள் இருப்பது அவசியம் என்பதை மக்கள் அறிவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடும் வறட்சி
2018ல் ஏற்பட்ட கடும் வறட்சியிலும் அரசு முறையாக குடிநீர் வழங்கியது. நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் நிலைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளன என்றும் ஒபிஎஸ் ஈபிஎஸ் கூறியுள்ளனர்.
நிலஅபகரிப்பு
அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, அடியாட்களை வைத்து நடத்தும் அரசியல் அராஜகம், நில அபகரிப்பு அறவே இல்லை என்று தெரிவித்த அவர்கள், தமிழகம் நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி முன்னேற்றப்பாதையில் செல்ல மக்கள் தங்களுக்கு ஆதரவை தரவேண்டுமென்று வலியுறுத்தி உள்ளனர்.