பாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாதி வெற்றிபெற்றாலும் பரவாயில்லை விரைவில் தேர்தலை நடத்திவிடுவது என்ற எண்ணத்தில் உள்ளார்களாம் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும்.
காரணம் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை நிலவரம் வேறு விதமாக இருந்தாலும் கூட, நகராட்சி, மாநகராட்சிகளில் அதிமுகவினர் இருப்பது கட்சியை கரையாமல் பார்த்துக்கொள்ளும் என்பது அவர்கள் எண்ணமாம்.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் அரசு நடத்தக்கூடும் என்றும், அதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கிவிட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முதல்முறையாக
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டாக பிரித்து நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கு பாதி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பாதி இடங்களை வென்றாலும் பரவாயில்லை, நாம் பாதி இடத்தை வெல்லலாம் என நினைக்கிறதாம் அதிமுக. தேர்தலை தள்ளிவைத்துக்கொண்டே செல்வது நமக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என சீனியர் நிர்வாகிகள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸிடம் எடுத்துக்கூறியுள்ளார்கள். இதையடுத்து அவர்களும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடலாம் என எண்ணுகிறார்களாம்.
விரைவில் அறிவிப்பு
இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத புதிய மாவட்டங்களில் அடுத்த மாதம் தேர்தலை நடத்திவிட்டு, அதற்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.
தென் மாவட்டம்
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழகத்தின் கடைகோடி மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவர், ''2021- நிலவரம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது, அதனால் இப்போதே தேர்தலை நடத்திவிட்டால் முழுவதுமாக வெற்றிபெற முடியவில்லை என்றால் கூட கவுரவமான எண்ணிக்கையில் நகராட்சி, மாநகராட்சிகளை கைப்பற்றிவிடுவோம்''. இதன் மூலம் கட்சி அடிமட்ட அளவில் பலமாக இருக்கும் எனக் கூறினார்.